

ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு, சென்னை சாந்தோம் தேவாலயத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்ற கிறிஸ்தவர்கள். | படம்: எஸ்.சத்தியசீலன் |
சென்னை: ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி தேவாலயங்களில் நடைபெற்ற நள்ளிரவு சிறப்பு ஆராதனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த பெருவிழாவான ஈஸ்டர் பண்டிகைக்கு முன்னதாக கிறிஸ்தவர்கள் அனுசரிக்கும் 40 நாள் தவக்காலம் கடந்த பிப்ரவரி 18-ம் தேதி சாம்பல் புதன்கிழமையுடன் தொடங்கியது.
இதைத்தொடர்ந்து கடந்த மார்ச் 29-ம் தேதி குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்பட்டது. குருத்தோலை ஞாயிறு முதல் ஈஸ்டர் பண்டிகை வரையிலான காலம் புனித வாரமாக கடைபிடிக்கப்படும்.
அந்த வகையில், புனித வாரத்தில் பெரிய வியாழன் அன்று கத்தோலிக்க தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாளில் தனது 12 சீடர்களின் பாதங்களைக் கழுவி தூய்மைப்படுத்தியதை நினைவுகூரும் வண்ணம் ஒவ்வோர் ஆலயத்திலும் பாதிரியார்கள் 12 பேரின் பாதங்களை கழுவி சுத்தப்படுத்தினர்.
சாந்தோம் திருத்தலத்தில் சென்னை மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் எஸ்.ஜார்ஜ் அந்தோணிசாமி 12 பேரின் பாதங்களை சுத்தப்படுத்தினார்.
இந்நிலையில், புனித வாரத்தின் முக்கிய நிகழ்வான புனித வெள்ளி கடந்த வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இயேசு கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளை நினைவுகூரும் விதமாக, அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் சிலுவைப் பாதையும், அதைத் தொடர்ந்து திருச்சிலுவை ஆராதனையும் நடைபெற்றன.
சாந்தோம் பேராலயம், லஸ் சர்ச், பெசன்ட் நகர் புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், எழும்பூர் திரு இருதய ஆண்டவர் ஆலயம் உள்ளிட்ட கத்தோலிக்க தேவாலயங்களிலும், அண்ணா சாலை கதீட்ரல் பேராலயம், எழும்பூர் புனித திருமுழுக்கு யோவான் ஆலயம் உள்ளிட்ட சிஎஸ்ஐ ஆலயங்களிலும், ஈசிஐ உள்ளிட்ட இதர கிறிஸ்தவ சபைகளின் ஆலயங்களிலும் நடைபெற்ற புனித வெள்ளி சிறப்பு ஆராதனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில், ஈஸ்டர் பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதை யொட்டி நேற்று நள்ளிரவு கிறிஸ்தவ ஆலயங்களில் ஈஸ்டர் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.
கத்தோலிக்க ஆலயங்களில் இயேசு கிறிஸ்து கல்லறையில் இருந்து உயித்தெழுந்ததை நினைவு கூறும் காட்சி நள்ளிரவு 12 மணிக்கு காட்சிப்படுத்தப்பட்டு உயிர்த்த இயேசுவின் சொரூபம் வைக்கப்பட்டது.
சிறப்பு திருப்பலி மற்றும் ஆராதனை முடிந்த பிறகு ஒவ்வொருவரும் அருகே இருந்தவர்களுக்கு கைகுலுக்கி ஈஸ்டர் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.