

குமுளி: மாதாந்திர வழிபாட்டுக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மாலை நடை திறக்கப்பட உள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு மலையாள மாத தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு 5 நாட்கள் வழிபாடு நடைபெறுவது வழக்கம். இதன்படி சிங்கம் (ஆவணி) மாத வழிபாட்டுக்காக இன்று (ஞாயிறு) மாலை கோயில் நடைதிறக்கப்பட உள்ளது. கோயிலின் தலைமை அர்ச்சகர் (தந்திரி) கண்டரரு பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி, நடையை திறக்க உள்ளார். இதைத் தொடர்ந்து ஐயப்பனின் விக்கிரகத்தின் மேல் சாத்தப்பட்டுள்ள விபூதி அகற்றப்பட்டு தவக்கோல நிலை மாற்றப்படும்.
தொடர்ந்து 18-ம் படி வழியே சென்று அங்குள்ள ஆழிக்குண்டத்தில் புனிதஜோதி ஏற்றப்படும். பின்பு பக்தர்களுக்கு விபூதி பிரசாதமாக வழங்கப்பட்டு அன்று எந்த பூஜையும் நடைபெறாது.
இரவு கோயில் நடை சாத்தப்பட்டு பின்பு மறுநாள் (நாளை) அதிகாலை முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு பல்வேறு வழிபாடுகள் நடைபெற உள்ளது. 21-ம் தேதி இரவு நடை சாத்தப்பட்டு பின்பு ஓணம் வழிபாட்டுக்காக மீண்டும் 24-ம் தேதி கோயில் நடை திறக்கப்பட்டு 28-ம் தேதி வரை வழிபாடுகள் நடைபெறும்.
தற்போது சபரிமலையில் பருவமழை தொடர்வதால் பக்தர்கள் குடை, மழை கோட் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வர வேண்டும். இவ்வாறு தேவசம் போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.