

ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டி தெருவில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்ட மூதாட்டி.
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பத்ரகாளியம்மன் கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி 64-வது ஆண்டாக முத்தம்மாள் (93) என்ற மூதாட்டி கொதிக்கும் நெய்யில் கைகளால் அப்பம் சுட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டி தெருவில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் மகா சிவராத்திரி தினத்தில் கைகளால் கொதிக்கும் நெய்யில் அப்பம் சுட்டு சுவாமிக்கு படைக்கும் விசேஷ நிகழ்வு 100 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.
இதில் ஊரணிபட்டி தெருவைச் சேர்ந்த முத்தம்மாள் (93) என்பவர் 63 ஆண்டுகளாக சிவராத்திரி அன்று இரவு கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்டு வருகிறார்.
64-வது ஆண்டாக இந்த ஆண்டு 48 நாட்கள் விரதமிருந்த முத்தம்மாள், அம்மனுக்கு சாற்றிய புடவையை அணிந்துகொண்டு நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு கொதிக்கும் நெய்யில் அப்பம் சுட்டார். நெய்யால் பக்தர்களுக்கு நெற்றியில் திலகமிட்டு மூதாட்டி ஆசி வழங்கினார். அந்த அப்பம் அம்மனுக்கு படைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.