

கோலாலம்பூர்: மலேசியா பத்து மலை முருகன் கோயிலில் ஜன.1-ம் தேதி புதுப்பொலிவுடன் சிலை திறப்பு விழா நடைபெறவுள்ளது.
மலேசியாவில் கோலாலம்பூர் அருகே கோம்பாக் மாவட்டத்தில், சுண்ணாம்பு மலைக்குன்றுகளுக்கு இடையே இயற்கை சூழலில் பத்து மலை முருகன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் முன்பாக 140 அடி உயர முருகன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இங்கு தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. இக்கோயிலுக்கு 272 படிகள் ஏறிச் சென்று மூலரான முருகனை தரிசிக்க வேண்டும். இவ்வாறு போகும் போது, வழியில் பலகுகைகள் உள்ளன. பல்வேறு சுவாமிகளின் சன்னதிகளும் உள்ளன.
இக்கோயிலின் முகப்பில் பிரம்மாண்டமான முருகன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. 140 அடி உயரமுள்ள இச்சிலைக்கு தங்க வர்ணம் பூசப்பட்டு இருக்கும். தற்போது இச்சிலை பகுதியில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் இச்சிலை திரை போட்டு மூடப்பட்டுள்ளது.
இந்தப் பணிகள் முழுமை பெற்று வரும் ஜன.1-ம் தேதி பிரம்மாண்டமான முறையில் புதுப்பொலிவுடன் திறப்பு விழா நடைபெற உள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த முருகன் சிலை முன் நின்று புகைப்படம், அல்லது வீடியோ எடுத்து கொள் ளலாம் என வரும் திரளான வெளிநாட்டு பக்தர்கள் பராமரிப்புப் பணிகளால் சற்று ஏமாற்றம் அடைந்து வருகின்றனர் என உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.