மன்னித்து அருளும் தயாளன்... ! | மார்கழி மகா உற்சவம்

மன்னித்து அருளும் தயாளன்... ! | மார்கழி மகா உற்சவம்
Updated on
1 min read

கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம் |

அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப் ||

பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம் |

குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு ||

உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது! |

அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச் |

சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே |

இறைவா! நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்! ||

(திருப்பாவை 28)

மேக நிறம் கொண்ட கண்ணா! ஆயர்குல மக்களாகிய நாங்கள், பசுக்களை மேய்ப்பவர்கள். கட்டுச்சாதம் உண்பவர்கள். அதிக ஞானம் இல்லாதவர்களாக இருப்பவர்கள். எங்களுக்கு நீ தலைவனாகக் கிடைத்தது, நாங்கள் பெற்ற பெரும்பேறாகும். உனக்கும், எங்களுக்குமான பந்தம் பிரிக்க முடியாதது.

உன்னை கேசவன், நாராயணன், மாதவன், கோவிந்தன், விஷ்ணு, மதுசூதனன், மாமாயன், திருவிக்கிரமன், வாமனன், ஸ்ரீதரன், ரிஷிகேசன், பத்மநாபன், தாமோதரன், வைகுந்தன் என்று பெயர் சொல்லி அழைக்கிறோமே என்று எங்கள் மீது கோபம் கொள்ள வேண்டாம். நாங்கள் ஏதும் அறியா சிறுபிள்ளைகள். இறைவா! அதனால் உன் அருளை எங்களுக்குத் தருவாயாக என்று தோழிகள், கண்ணனிடம் உரிமையோடு வேண்டுகின்றனர்.

அனைவருக்கும் அருள்பாலிப்பவன் ஈசன்…!

முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய் |

மூவரும் அறிகிலர் யாவர் மற்றறிவார் ||

பந்தணை விரலியும் நீயும் நின்னடியார் |

பழங்குடில் தோறும் எழுந்தருளிய பரனே! ||

செந்தழல் புரை திருமேனியும் காட்டித் |

திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி ||

அந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய் |

ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே! ||

(திருப்பள்ளியெழுச்சி 8)

சிவபெருமானே! என்னை ஆட்கொண்ட தலைவனே! பார்வதிதேவியின் அடியவர்களின் எளிய வீடுகளுக்கு வந்து அருள்பாலிக்கும் ஈசனே! உலகத்தை படைத்த முதல்வனான நீ, அனைவருக்கும் நடுநாயகமாக விளங்குபவன். பிரம்மதேவர், மகாவிஷ்ணு உள்ளிட்டோராலேயே உன்னை அறிய முடியாதபோது, மற்றவர்கள் எல்லாம் எம்மாத்திரம்? அவர்களால் உன்னை அறியமுடியாது. திருப்பெருந்துறை கோயிலை எனக்கு காட்டி அருளினாய்.

அந்தணர் வேடம் தாங்கி வந்து என்னை ஆட்கொண்டாய். உடனே நீ துயில் எழுவாயாக என்று மாணிக்கவாசகர் ஈசனுக்கு திருப்பள்ளியெழுச்சி பாடுகிறார். இறைவன் மிகவும் எளிமையானவன். அனைவருக்கும் அருள்பாலிக்கும் அவனை வணங்க எதுவுமே தேவையில்லை. நல்ல உள்ளம் மட்டுமே போதும் என்பதை இப்பாடல் உணர்த்துகிறது.

மன்னித்து அருளும் தயாளன்... ! | மார்கழி மகா உற்சவம்
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 12 ஜனவரி 2026

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in