

மாப்பிள்ளை அலங்காரத்தில் காட்சி தந்த பரமதத்தர்.
காரைக்கால்: காரைக்காலில் புகழ்பெற்ற காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழா நேற்று மாலை மாப்பிள்ளை அழைப்பு வைபவத்துடன் தொடங்கியது.
63 நாயன்மார்களில் சிறப்பிடம் பெற்றவரும், இறைவனால் அம்மையே என்று அழைக்கப்பட்டவருமான புனிதவதியார் என்று அழைக்கப்படும் காரைக்கால் அம்மையாருக்கு காரைக்காலில் தனிக் கோயில் உள்ளது.
இக்கோயிலில், அம்மையார் வரலாற்றை நினைவுகூரும் விதமாக, கைலாசநாத சுவாமி, நித்ய கல்யாணப் பெருமாள் வகையறா தேவஸ்தானத்தின் சார்பில் ஆண்டுதோறும் மாங்கனித் திருவிழா சிறப்பான வகையில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழா நேற்று பரமதத்தர் அழைப்பு (மாப்பிள்ளை அழைப்பு) வைபவத்துடன் தொடங்கியது. இதையொட்டி ஆற்றங்கரை சித்தி விநாயகர் கோயிலில் இருந்து பரமதத்தரை அம்மையார் கோயிலுக்கு ஊர்வலமாக அழைத்து வரும் மாப்பிள்ளை அழைப்பு வைபவம் தொடங்கி நடைபெற்றது.
இதில், ஏராளமான பெண்கள் உள்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று (ஜூன் 28) காலை 7 மணிக்கு புனிதவதியார் தீர்த்தக்கரைக்கு வருதல், 7.30 மணிக்கு பரமதத்த செட்டியார் குதிரை வாகனத்தில் திருக்கல்யாண மண்டபத்துக்கு வருதல், தொடர்ந்து காலை 10.30 மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகின்றன.
நாளை (ஜூலை 29) கைலாசநாதர் கோயிலில் அதிகாலை பிச்சாண்டவர், பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்வான பக்தர்கள் மாங்கனிகளை வாரி இறைத்து இறைவனை வழிபடும் பிச்சாண்டவர் வீதியுலா புறப்பாடு கைலாசநாதர் கோயிலில் தொடங்கி நடைபெற உள்ளது.
அன்று மாலை புனிதவதியார் பிச்சாண்டவரை எதிர் சென்று அழைத்து அம்மையார் கோயிலில் அமுது படைக்கும் நிகழ்வு நடைபெறுகிறது அதைத் தொடர்ந்து, ஜுன் 30-ம் தேதி அதிகாலை அம்மையாருக்கு சிவபெருமான் காட்சியளிக்கும் நிகழ்வு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.