

திருமலை: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆண்டுதோறும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் உண்டியல் ஆதாயமும் ஆண்டுக்கு ரூ.1,500 கோடியை தாண்டியுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் கோயில்கள் மட்டுமின்றி, சனாதன தர்மத்தையும் நிலைநாட்ட பல வழிகளை மேற்கொண்டு வருகிறது. இது தவிர பிராண தானம், அன்னதானம், கல்வி தானம் என பல வழிகளில் பக்தர்களுக்கு பக்க பலமாக இருந்து வருகிறது.
தர்ம பிரச்சார பரிஷத் மூலம் இந்து மத தர்மத்தை உலகெங்கிலும் கடைப் பிடிக்க தற்போது தயாராகி வருகிறது. இனி உலகெமெங்கிலும் ஏழுமலையான் கோயில்கள் கட்டப்பட உள்ளது. இதுவரை காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை என்றிருந்த நோக்கம், முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் ஆலோசனையின் பேரில், உலக நாடுகள் முழுவதும் ஏழுமலையானின் கோயில்களை உருவாக்க திட்டம் தயாராகி வருகிறது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஒரு ’குளோபல் பிராண்ட்’ ஆக உருவாக உள்ளது. இதன் மூலம் ஏழுமலையானின் சொத்துகளை அதிகரிக்கவும், உண்டியல் வருமானத்தை கூட்டவும் செய்யலாம் எனவும் கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியா, இலங்கை, நெதர்லாந்து, ஸ்வீடன், ஸ்விட்சர்லாந்து, போலந்து, அயர்லாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் உள்ள இந்தியர்களிடமிருந்து திருப்பதி தேவஸ்தானத்திற்கு கோயில் கட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன. இவைகளை தேவஸ்தானத்தினர் பரிசீலித்து வருகின்றனர்.
ஒரு நிபுணர் குழுவை நியமனம் செய்து, மேற்கண்ட நாடுகளுக்கு அனுப்பி, அங்கு கோயில் கட்டுவது தொடர்பான நிபந்தனைகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்து சமய அறநிலைய துறை, ரிசர்வ் வங்கி, பெரா, பெமா போன்றவற்றின் அனுமதிகளை முதலில் பெற வேண்டியுள்ளது. இந்த அனுமதிகள் கிடைத்ததும், கோயில் கட்டுமான பணிகளை திருப்பதி தேவஸ்தானம் தொடங்கும்.
அதற்கு முன்பாக 3 விதிமுறைகளை பரிசீலிக்கிறது. அதன்படி, கோயில் இடத்தை யாராவது அல்லது அரசு தானமாக கொடுத்தால், அந்த இடத்தில் திருப்பதி தேவஸ்தானமே சொந்தமாக கோயில் கட்டுவது.
இரண்டாவதாக, ஒருவேளை திருப்பதி தேவஸ்தானம் சொந்தமாக கோயில் கட்ட வேண்டாம் என தீர்மானித்தால், அந்தந்த நாடுகளில் உள்ள இந்து மத அமைப்பினர் சார்பில் கட்டப்படும் கோயிலுக்கு திருப்பதி தேவஸ்தானம் சிலைகளை வழங்கி, ஆகம விதிமுறைகளை பின்பற்ற தேவஸ்தானம் சார்பில் அர்ச்சகர்களை நியமனம் செய்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது, தனியார் மற்றும் திருப்பதி தேவஸ்தானம் இணைந்து கோயிலை கட்டி, பராமரிப்பது. ஆனால், முதலில் கூறியதுபோல் செய்தால்தான் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வருவாய் பெருகும் என கூறப்படுகிறது. அப்போது தான் முழுவதுமாக ஆகம விதிகளை கடைபிடிக்க இயலும் எனவும் ஆகம வல்லுனர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.