

தஞ்சை: கும்பகோணத்தில் உலக பிரசித்தி பெற்ற ஆதிகும்பேஸ்வரர் கோயில் உள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பகோணத்தில் நடைபெறும் மகாமகத் திருவிழா தொடர்புடைய 12 சைவ திருத்தலங்களில் முதன்மையானது மங்களாம்பிகா உடனாய ஆதி கும்பேஸ்வரர் கோயில் உள்ளது.
இக்கோயிலில், கடந்த 2009ம் ஆண்டு ஜூன் 5ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இந்நிலையில், வரும் 2028ம் ஆண்டு மகாமக விழா நடைபெற உள்ள நிலையில், கோயில் கும்பாபிஷேக்தை நடத்த பக்தர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து, கும்பாபிஷேகம் செய்ய ரூ.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த 2023ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி பாலாலயம் செய்யப்பட்டு, திருப்பணிகள் நடைபெற்று வந்தன.
திருப்பணிகள் நிறைவுற்ற நிலையில், 16 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (டிச.1) கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதையொட்டி, கடந்த மாதம் 24ம் தேதி, மகா கணபதி ஹோமம், கஜ, விக்னேஸ்வர, பிரம்மச்சாரி பூஜைகளும், மாலை வாஸ்து சாந்தி, பிரவேச பலி, 25-ம் தேதி நவக்கிரஹ ஹோமம், கோ, அஸ்வ, சுவாசினி பூஜைகளும், மாலை ரக்க்ஷோக்ன ஹோமம், க்ராம சாந்தி, திச ஹோமம், 26ம் மூர்த்தி ஹோமம், ப்ரஸன்ன அபிஷேகம், ஆச்சார்ய வர்ணம், மாலை அங்குரார்ப்பணம், சோம கும்ப பூஜை, ஸ்தல ஆச்சார்யா ரக்சாபந்தனம், யாக சாலை நிர்மாணம் நடைபெற்றது.
மேலும், ஒன்றரை அடி முதல் 9 அடி உயரமுள்ள தங்கமுலாம் பூசப்பட்ட 44 கலசங்கள், காவிரி ஆற்றில் இருந்து கலசங்களில் புனித நீர் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து, 10 ஆயிரம் சதுரடி பரப்பளவில், 99 குண்டங்கள் கூடிய யாக சாலை அமைக்கப்பட்டு, கடந்த நவ.27-ம் தேதி முதல் கால யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக யாகம் தொடங்கியது.
இதையடுத்து 28-ம் தேதி 2-ம் மற்றும் 3-ம் கால யாகசாலை பூஜையும், 29-ம் தேதி 4-ம் மற்றும் 5-ம் கால யாகசாலை பூஜையும், 30-ம் தேதி 6-ம் மற்றும் 7-ம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றன. பிரதான விழாவான கும்பாபிஷேகம் இன்று (டிச.1) நடைபெற்றது.
இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, 8-ம் கால யாக சாலை பூஜை, புண்யாஹவாசனம், 3:30 மணிக்கு பிம்ப சுத்தி, ரக்சாபந்தனம், 5 மணிக்கு பரிவார பூர்ணாஹூதியுடன் கடம் புறப்பாடாகி, சிவச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, சிவ வாத்தியங்கள் இசைக்க, காலை 6:45 மணிக்கு விமான மகா கும்பாபிஷேகம், 7:15 மணிக்கு மூலஸ்தான மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து, மூலவர் அபிஷேகம், விசேஷ அலங்காரம், மகா தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து மாலை 4 மணிக்கு மகா அபிஷேகம், இரவு 7 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் ரிஷிப வாகனத்தில் வீதியுலா நடைபெறுகிறது.
கும்பாபிஷேக விழாவில் அமைச்சர்கள் சேகர்பாபு, கோவி.செழியன், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சுபுதீந்திர தீர்த்த சுவாமிகள் உள்ளிட்ட ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.