

சென்னை கொரட்டூரில் உள்ள ஓம்சக்தி நாகவல்லி அம்மன் கோயில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு அலகு குத்திக் கொண்டும், காவடி எடுத்தும், உடலில் மிளகாய் சாந்து கரைசலை ஊற்றிக் கொண்டும், பக்தர்கள் விநோத நேர்த்திக் கடன் செலுத்தினர். | படங்கள்: எஸ்.சத்தியசீலன் |
சென்னை: கொரட்டூரில் உள்ள ஓம்சக்தி நாகவல்லி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆடித் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, மிளகாய் சாந்து கரைசலில் குளித்து விநோதமாக நேர்த்திக் கடனைச் செலுத்தினர்.
சென்னை அடுத்த கொரட்டூர் டிஎன்எச்பி குடியிருப்பு, 47-வது தெருவில் அமைந்துள்ளது ஓம்சக்தி நாகவல்லி அம்மன் கோயில். இக்கோயில் சுமார் 50 ஆண்டுகள் பழமையானது.
தொடக்கத்தில் ஒரு வேப்பமரமும், புற்றும் மட்டுமே இருந்த இடத்தில், நாகவல்லி அம்மனைப் பிரதிஷ்டை செய்து பக்தர்கள் வழிபடத் தொடங்கினர். திருமண வரம் மற்றும் குழந்தை வரம் வேண்டி வரும் பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறும் இடமாக இக்கோயில் திகழ்கிறது.
தற்போது, ஆடி மாதத்தை முன்னிட்டு இக்கோயிலில் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஆடி 2-வது வாரத் திருவிழாவை முன்னிட்டு, நேற்று சுமார் 1,500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் ஊர்வலமாக வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விழாவின் ஒரு பகுதியாக, பக்தர்கள் உடல் முழுவதும் மிளகாய் தூள் கலந்த சாந்து கரைசலை ஊற்றி விநோத நேர்த்திக் கடன் செலுத்தினர். மாலையில், 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி தீமிதித்து அம்மனை வழிபட்டனர்.
விழாவின் நிறைவாக, எலுமிச்சை, செவ்வாழை, ஆப்பிள், சாத்துக்குடி, தர்பூசணி மற்றும் அன்னாசி போன்ற பல்வேறு பழங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட நாகவல்லி அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.
இதில், கொரட்டூர், அம்பத்தூர், பாடி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல், சென்னையின் முக்கிய அம்மன் கோயில்களான மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் மற்றும் கோலவிழி அம்மன் கோயில், பிராட்வே காளிகாம்பாள் கோயில், பாடி படவேட்டம்மன் கோயில், வில்லிவாக்கம் பாலி அம்மன் கோயில், சூளை அங்காளம்மன் கோயில் உள்ளிட்ட பல இடங்களில் நேற்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அங்கு திரளான பக்தர்கள் கூழ் வார்த்தும், பொங்கலிட்டும் அம்மனை வழிபட்டனர்.