

குமுளி: மண்டல பூஜையின்போது ஐயப்பனுக்கு அணிவிப்பதற்கான தங்க அங்கி நேற்று ஆரன்முலா பார்த்தசாரதி கோயிலில் இருந்து சபரிமலைக்கு ஊர்வலமாக புறப்பட்டது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் 27-ம் தேதி நடைபெறும் மண்டல பூஜையன்று சுவாமிக்கு தங்க அங்கி அணிவிக்கப்படும். இதையொட்டி, 430 பவுன் எடை கொண்ட தங்க அங்கியை சபரிமலைக்கு கொண்டுவரும் வைபவம் நேற்று தொடங்கியது.
ஆரன்முலா பார்த்தசாரதி கோயிலில் சரண கோஷத்துடன் தங்க அங்கி ரத யாத்திரை நேற்று தொடங்கியது. சிறப்பு பூஜைகளுக்குப் பின்னர், அலங்காரத்துடன் கூடிய வாகனத்தில், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தங்க அங்கி ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சவுட்டுகுளம் மகாதேவ கோயில், இலந்தூர் பகவதிதேவி கோயில், பிரக்கானம் இடநாடு பகவதி கோயில் வழியாக நேற்று இரவு ஓமல்லூர் ரத்தகண்ட சுவாமி கோயிலை தங்க அங்கி வந்தடைந்தது. இன்று இரவு கோனி முரிங்கமங்கலம் கோயில், நாளை இரவு பெருநாடு சாஸ்தா கோயிலை வந்தடையும்.
வரும் 26-ம் தேதி சாலக்காயம் வழியாக பம்பையை சென்றடையும். அங்கிருந்து மாலை 3 மணிக்கு தலைச்சுமையாக நீலிமலை வழியே தங்க அங்கி கொண்டு செல்லப்படும். சரங்குத்தியில் வரவேற்பு அளிக்கப்பட்ட பின்னர் 18-ம் படி வழியாக தங்க அங்கி எடுத்துச் செல்லப்படும்.
பின்னர் நம்பூதிரி, மேல்சாந்திகளிடம் தங்க அங்கி ஒப்படைக்கப்பட்டு, மாலை 6.30 மணிக்கு ஐயப்பன் விக்கிரகத்தில் அணிவிக்கப்படும். பின்னர் இரவு அங்கி களையப்பட்டு நடை சாத்தப்படும். மீண்டும் வரும் 27-ம் தேதி காலை 10 மணிக்கு அங்கி அணிவிக்கப்படும். அன்று முழுவதும் தங்க அங்கியுடன் கூடிய சுவாமியை பக்தர்கள் தரிசிப்பர். அன்று இரவு 11 மணிக்கு ஹரிவராசனம் பாடலுடன் மண்டல வழிபாடுகள் நிறைவடையும். இந்த சிறப்பு வழிபாட்டுக்காக பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.