

சென்னை: தகவல்தொடர்பு சேவைக்கான அமெரிக்காவின் புளூபேர்ட்-6 செயற்கைக்கோள் இஸ்ரோவின் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் இன்று விண்ணில் பாய்கிறது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வணிக ரீதியாகவும் செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. அதன்படி அமெரிக்காவின் ஏஎஸ்டி ஸ்பேஸ்மொபைல் நிறுவனத்தின் புளூபேர்ட்-6 எனும் நவீன தகவல்தொடர்பு செயற்கைக்கோளை, இஸ்ரோவின் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் செலுத்த முடிவானது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இஸ்ரோவின் என்எஸ்ஐஎல் நிறுவனம் வாயிலாக மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, புளூபேர்ட்-6 செயற்கைக்கோள், எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஹரிகோட்டாவில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 8.54 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்த ராக்கெட் ஏவுதலுக்கான 24 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று காலை தொடங்கியது. தற்போது ராக்கெட்டில் எரிபொருள் நிரப்புதல் உட்பட இறுதிகட்டப் பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் நேற்று முழுவீச்சில் ஈடுபட்டனர்.
தகவல் தொடர்புக்கான புளூபேர்ட் செயற்கைக்கோள் சுமார் 6,100 கிலோ எடை கொண்டது. 223 சதுர மீட்டர் பரப்பளவுடன் கூடிய அமைப்பை கொண்டது. விண்வெளியில் இருந்து நேரடியாக செல்போன்களுக்கு அதிவேக இணைய சேவையை வழங்குவதுதான் இந்த செயற்கைக்கோளின் பிரதான நோக்கமாகும். இதன்மூலம் செல்போன் டவர்கள் இல்லாத அடர்ந்த காடுகள், மலைப்பகுதிகளிலும் 5ஜி வேகத்தில் இணையம், வீடியோ அழைப்புகள், குறுஞ்செய்தி சேவைகளைப் பெற முடியும்.
மேலும், இஸ்ரோ இதுவரை விண்ணில் செலுத்தியதிலேயே இதுதான் அதிக எடையுள்ள செயற்கைக்கோள் என்பது குறிப்பிடத்தக்கது.