

குமுளி: சபரிமலை பிரசாதங்களில் பிரசித்தி பெற்றது அரவணை பாயசம் ஆகும். இத்துடன் ஐயப்பனுக்கு மேலும் 3 வகையான நைவேத்தியங்கள் படைக்கப்படுகின்றன. அதிகாலையில் சுவாமிக்கு பஞ்சாமிர்தம் நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. முதற்கால உஷத் பூஜை காலை 7.30 மணிக்கு நடைபெறும்.
இதில் தேங்காய் துருவலை பல முறை இடித்து அதில் இருந்து பெறப்பட்ட பாலை சர்க்கரை சேர்த்து தயாரிக்கப்படும் பாயசத்தை சுவாமிக்கு நைவேத்தியம் செய்யப்படுவது வழக்கம்.
இது இடித்துப்பிழிந்த பாயசம் எனப்படும். மதியம் நடைபெறும் உச்சிகால பூஜையின் போது சிவப்பு அரிசி, பொடித்த வெல்லம், தேங்காய், நெய்யினால் தயாரிக்கப்பட்டஅரவணையும், இரவு நடைபெறும் அர்த்த ஜாம பூஜையின்போது சீரகம், வெல்லம், சுக்கு, மிளகு சேர்ந்த மருத்துவ குணம் கொண்ட கசாய கலவையான பானகம் மற்றும் எள் பாயசமும் நைவேத்தியமாக படைக்கப்படும். பாயசம் என்று சொன்னாலும் இது எள் நிறைந்து திடமாக அடை போன்று இருக்கும்.
பக்தர்களுக்கு விற்பனை... ஐயப்பனுக்கு நைவேத்தியம் செய்யப்படும் பொருட்களில் அரவணை பாயசம் மற்றும் பஞ்சாமிர்தம் மட்டுமே பக்தர்களுக்குவிற்பனை செய்யப்படுகிறது என்றும், பஞ்சாமிர்தம் ரூ.125 -க்கு விற்கப்படுவதாகவும் தேவசம் போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.