

சபரிமலை அடிவாரப் பகுதியான பம்பையில் நேற்று கூடிய பெருந்திரளான பக்தர்கள் கூட்டம்.
குமுளி: சபரிமலை மகரகால வழிபாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டதால் நேற்று பெரும் நெரிசல் ஏற்பட்டது. குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு பக்தர்கள் திண்டாடியதுடன், 8 மணி நேரத்துக்கும் மேல் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 14-ம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 30-ம் தேதி மாலை கோயில் நடை திறக்கப்பட்டது. இதுவரை சுமார் 6.5 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். உற்சவ நிகழ்ச்சிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளதால் பக்தர்கள் கூட்டம் கடந்த 2 நாட்களாகவே அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் சபரிமலை வழித்தடங்களில் இதுவரை இல்லாத கூட்டம் நேற்று இருந்தது.எரிமேலியில் இருந்து பெருவழிப்பாதை, பம்பை, கணபதி கோயில், மரக்கூட்டம், அப்பாச்சிமேடு, பெரிய நடைப்பந்தல் உள்ளிட்ட பகுதிகளிலும் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்தது. குறிப்பாக சந்நிதானத்தில் இருந்து மரக்கூட்டம் வரை ஒதுங்கக்கூட இடம் இல்லாத நிலையில் நெரிசல் ஏற்பட்டது. மேலும் பம்பை பாலத்தின் தொடக்கத்தில் இருந்து திருவேணி சங்கமம், கணபதி கோயில் வாயில் வரை நெரிசல் ஏற்பட்டது. இருமுடியுடன் 8 மணி நேரத்துக்கும் மேல் காத்திருந்து சந்நிதானத்தை அடையும் நிலையே நேற்று இருந்தது. இதனால் குடிநீர், கழிப்பிடம், உணவுக்கு பக்தர்கள் சிரமப்பட்டனர்.
இலவச குடிநீர் வழங்கப்படுவதும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் பரிதவித்தனர். அளவுக்கு மீறிய கூட்டத்தைகட்டுப்படுத்துவது காவல்துறை,சிறப்பு அதிரடிப்படையினருக்கு பெரும் சவாலாக உள்ளது. ஸ்பாட் புக்கிங்கை குறைத்து கூட்டத்தை முறைப்படுத்தி அனுப்பினால்தான் ஐயப்பனை சிரமமின்றி தரிசிக்க முடியும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.