

கும்பாபிஷேகம்
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது. சங்கராச்சாரியார் விஜயேந்திரர், அமைச்சர் டிஆர்பி. ராஜா மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் முக்கிய வைணவ தளங்களில் ஒன்றான மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் கும்பாபிஷேகம் இன்று காலை மணிக்கு நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை ஒட்டி கடந்த 26 ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கி, இன்று காலை 8 மணி அளவில் ஐந்தாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று பூர்ணாஹுதி பகுதி நடந்தது.
அதனைத் தொடர்ந்து தீட்சிதர்கள் புனித நீரை ஊர்வலமாக எடுத்து வந்து ராஜகோபுரம் மற்றும் இதர கோபுரங்களுக்கு 9.17 மணி அளவிலும், ராஜகோபால சுவாமி செங்கமலத்தாயார் சன்னதி விமானங்களுக்கு 9.49 மணி அளவிலும் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.
கும்பாபிஷேக நிகழ்வில் காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அமைச்சர் டிஆர்பி.ராஜா, கோயில் அறங்காவலர் இளவரசன் மற்றும் அறங்காவல் குழு உறுப்பினர்கள் உட்பட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கும்பாபிஷேகத்தை கண்டு தரிசனம் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து ராஜகோபால சுவாமி செங்கமலத் தாயாரை நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தார்கள். கும்பாபிஷேகத்தை ஒட்டி 500-க்கும் மேற்பட்ட போலீஸார் ராஜகோபால சுவாமி கோயிலின் நான்கு வீதிகளிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.