

நாகை நம்பியார் நகர் கடற்கரையில் நேற்று நடைபெற்ற தங்க மீனை கடலில் விடும் உற்சவம். (உள்படம்) கடற்கரையில் எழுந்தருளிய சிவபெருமான்.
நாகப்பட்டினம்: அதிபத்த நாயனார் விழாவையொட்டி, நாகை நம்பியார் நகர் கடற்கரையில் அதிபத்த நாயனார் தங்க மீனை கடலில் விடும் உற்சவம் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயனார் சோழநாட்டின் நாகை கடற்கரைக்கு அருகே நம்பியார் நகரில் மீனவ குடும்பத்தில் பிறந்தவர். சிறு வயதில் இருந்தே சிவன் மீது மிகுந்த பக்திகொண்ட இவர், தனக்குக் கிடைக்கும் முதல் மீனை சிவபெருமானுக்கு அர்ப்பணித்து கடலில் விடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தனக்கு ஒரு மீன் மட்டுமே கிடைத்தாலும் கூட, அதைத் தானும் குடும்பத்தினரும் உண்பதற்குப் பயன்படுத்தாமல் சிவனுக்கு அர்ப்பணித்தார்.
அவரது இந்த அதீத பக்தியால் ஈர்க்கப்பட்ட சிவபெருமான், அதிபத்த நாயனாரை சோதிக்க எண்ணி, ஒருநாள் வெள்ளி மீன் ஒன்றையும், மறுநாள் ரத்தின மணிகள் பதிந்த தங்க மீனையும் அதிபத்த நாயனார் வலையில் பிடிபடுமாறு செய்தார். அவற்றையும் அதிபத்த நாயனார் எந்த தயக்கமும் இன்றி சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்தார்.
இதையடுத்து, அதிபத்தரின் பக்தியை மெச்சிய சிவபெருமான், பார்வதியுடன் இணைந்து அதிபத்தருக்கு காட்சி தந்து முக்தியளித்தார். ஆவணி மாதம் ஆயில்யம் நட்சத்திர நாளில் அதிபத்த நாயனார் முத்தியடைந்ததால், அந்நாளில் நாகை நம்பியார் நகர் மீனவ கிராமத்தில் மீனவ கிராம மக்கள் அதிபத்த நாயனாரின் முக்திப் பேறு விழாவை கடலில் தங்க மீன், வெள்ளி மீன் பிடிக்கும் திருவிழாவாக கொண்டாடுகின்றனர். அதன்படி நிகழாண்டு விழா நேற்று நடைபெற்றது.
இதையொட்டி, நாகை நம்பியார் நகரில் உள்ள கோயிலில் இருந்து நேற்று தங்க மீன், வெள்ளி மீன் மற்றும் சுவாமிகளுடன் நம்பியார் நகர் கடற்கரை வந்தடைந்தனர். பின்னர், அதிபத்த நாயனார் திருமேனியை மீனவர்கள் படகு ஒன்றில் வைத்து நடுகடலுக்குள் எடுத்துச் சென்று அங்கு தங்க மீன், வெள்ளி மீன்பிடித்து கடலில் விடும் சிவார்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது, சிவபெருமான் உற்சவ மூர்த்தியாக கடற்கரையில் எழுந்தருளினார். இதைத்தொடர்ந்து கடலில் பிடித்து வந்த தங்க மீனை அவருக்கு படைத்து, பூஜை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, சிவபெருமான் அதிபத்தருக்கு முக்தி தரும் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராளமான சிவனடியார்கள், மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.