அரியலூர் - ஆலந்துறையார் திருக்கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

அரியலூர் - ஆலந்துறையார் திருக்கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
Updated on
2 min read

அரியலூர்: அரியலூர் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஆலந்துறையார் திருக்கோயில் 600 ஆண்டுகள் பழமையான வரலாற்று புகழ் பெற்ற திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலின் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று (ஜூன்.01) வெகு விமரிசையாக நடைபெற்றது.

விழாவையொட்டி முன்னதாக மே 25ம் தேதி கணபதி ஹோமம், ஸ்ரீ லட்சுமி பூஜை ஹோமம், நவக்கிரக ஹோமங்கள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. 28ம் தேதி கோ பூஜையும் இதனைத் தொடர்ந்து 30-ம் தேதி செட்டிய ஏரி விநாயகர் ஆலயத்தில் இருந்து கஜபூஜையுடன் தொடங்கி தீர்த்த சங்கரஹனம் நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு முதல் காலை யாக பூஜை தொடங்கப்பட்டது.

தொடர்ந்து, அனைத்து விக்னேஷ்வர பூஜை, கடஸ்தாபனம் முதல் கால யாக பூஜை, இரண்டாம் காலம் மற்றும் மூன்றாம் கால யாக பூஜை நடத்தப்பட்டன. தொடர்ந்து இன்று காலை நான்காம் கால யாக பூஜைகள் நடத்தப்பட்டு நாடி சந்தானம், தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து யாக சாலையில் இருந்து கடம் புறப்பாடு நடத்தப்பட்டு யாகசாலையில் இருந்து புனித நீர் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு முதலில் விநாயகருக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து காலை 8:30 மணிக்கு அருள்மிகு ஸ்ரீ ஆலந்துறையார் சுவாமி மற்றும் அம்பாள் விமானம் உள்ளிட்ட அனைத்து விமானங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டது. கோயில் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்ட மகா கும்பாபிஷேக தீர்த்தம் ட்ரோன் மூலம் பொதுமக்கள் மேல் தெளிக்கப்பட்டது. அரியலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக் கணக்கான பக்தர்கள் திரளாக திரண்டு வந்து மகா கும்பாபிஷேகத்தை கண்டு தரிசித்தனர்.

பின்னர் மூலவர் ஸ்ரீ ஆலந்துறையர் மற்றும் அம்பாள் அருந்தவ நாயகி மற்றும் 68 நாயன்மார்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட ஆலந்துறையார் மற்றும் அருந்தவநாயகி ஆகியோருக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

கும்பாபிஷேகத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்து சமய அறநிலைத் துறை நிர்வாகத்தினர், ஓம் நமச்சிவாய திருப்பணிக்குழு மற்றும் ஸ்ரீ நரசிம்மா டிரஸ்ட் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் காவல்துறை சார்பில் அரியலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சியாமளா தேவி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெற உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in