

திண்டுக்கல்: மலேசியாவில் உள்ள பத்து மலை சுப்ரமணியர் சுவாமி கோயிலுக்கு தமிழக அரசின் நல்லிணக்க உறவை மேம்படுத்தும் வகையில் பழநி முருகன் கோயிலில் இருந்து வஸ்திர மரியாதை, பிரசாதம் கொண்டு செல்லப்பட்டது.
தமிழகத்தில் உள்ள கோயில்களுக்கும் இதர மாநிலங்கள் மற்றும் இதர நாடுகளில் உள்ள கோயிலுக்கும் இடையே நல்லிணக்க உறவை மேம்படுத்த வஸ்திர மரியாதை செய்யப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார்.
அதன்படி, மலேசியா நாட்டில் கோம்பாக் மாவட்டத்தில் உள்ள பத்துமலை சுப்ரமணியர் சுவாமி கோயிலுக்கு, பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் பிரசாதம், பெரியநாயகியம்மன் கோயிலில் இருந்து சிறப்பு பூஜைகள் செய்து வஸ்திரம், பழங்கள், சந்தனம், விபூதி, தீர்த்தம், மாலை உள்ளிட்டவைகள் இன்று கொண்டு செல்லப்பட்டன.
இதில் கோயில் இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் பிரகாஷ், அறங்காவலர் குழு உறுப்பினர் சுப்பிரமணியன், கண்காணிப்பாளர் அழகர்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அறங்காவலர் ராஜசேகரன் தலைமையில் அர்ச்சகர்கள் நேற்று திருச்சியில் இருந்து விமானம் மூலம் மலேசியா சென்றனர்.