பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் படை சூழ எதிர்சேவை - வைகையில் எழுந்தருளினார் கள்ளழகர்

சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த கள்ளழகர்.
சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த கள்ளழகர்.
Updated on
1 min read

மதுரை: கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்துக்காக மதுரைக்குப் புறப்பட்ட கள்ளழகரை மூன்றுமாவடியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வரவேற்ற எதிர்சேவை நடைபெற்றது.

மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா 12 நாட்கள் நடைபெற்று முடிந்தன. இதன் தொடர்ச்சியாக கள்ளழகர் விழா தொடங்கியது. சைவ- வைணவ ஒற்றுமை திருவிழா என்று குறிப்பிடப்படுகிறது.

மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோயிலில் சித்திரைத் திருவிழா மே 1-ம் தேதிதொடங்கியது. கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் சுந்தரராஜ பெருமாள் தோளுக்கினியானில் எழுந்தருளினார்.

நேற்று முன்தினம் மாலை அழகர்மலையிலிருந்து கள்ளழகர் மதுரைக்குப் புறப்பட்டு பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, சுந்தரராஜன்பட்டி, கடச்சனேந்தல் என வழிநெடுகிலும் மண்டகப்படிகளில் எழுந்தருளினார்.

நேற்று காலை மதுரை மாநகரஎல்லைக்குள் நுழைந்த கள்ளழகருக்கு மூன்றுமாவடியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நடைபெற்றது. பின்னர் கோ.புதூர் மாரியம்மன் கோயில், ஆட்சியர் பங்களா, ரிசர்வ்லைன் மாரியம்மன் கோயில் மற்றும் வழிநெடுகிலும் மண்டகப்படிகளில் எழுந்தரு ளினார்.

தொடர்ந்து, அவுட்போஸ்ட் அம்பலகார மண்டகப்படியில் எழுந்தருளினர். அங்கு பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் திரளாக வரவேற்று தரிசனம் செய்தனர்.

நேற்றிரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலுக்குச் சென்றார். இரவு 9 மணியளவில் அலங்காரம் களைதல் நடைபெற்றது. பின்னர் திருமஞ்சனமாகி இரவு 10.30 மணிமுதல் 11.30 வரைதங்கக்குதிரை வாகனத்தில் செல்லும் அலங்காரம் நடைபெற்றது.

லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர்: அதிகாலையில், ஆண்டாள் மாலை சாற்றுதல் மற்றும் மரியாதைக்குப் பின் தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றுக்கு சுந்தரராஜப் பெருமாள், கள்ளழகர் வேடத்தில் புறப்பட்டார். அதிகாலை 2.30 மணியளவில் தல்லாகுளம் கருப்பணசாமி கோயிலில் உத்தரவு பெறும் கள்ளழகர், பின்னர் ஆயிரம் பொன் சப்பரத்தேரில் எழுந்தருளினார்.

அதன்பின் ஆழ்வார்புரம் பகுதி, வைகை வடகரை வழியாக அதிகாலை 5.45 மணிக்கு மேல் 6.12 மணிக்குள் வைகை ஆற்றில் எழுந்தருளினார். இத்திருவிழாவில் பங்கேற்க லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிந்தனர்.

இன்று காலை 10.30 மணியளவில் ராமராயர் மண்டபத்தில் தண்ணீர் பீய்ச்சுதல் நடைபெறுகிறது. இரவு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் எழுந்தருளுகிறார். மே 6-ல் தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு மோட்சம் அளிக்கிறார், இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நடைபெறும். அதைத் தொடர்ந்து மே 8-ல் மதுரையிலிருந்து கள்ளழகர் அழகர்மலைக்குத் திரும்புகிறார். மே 9-ல் கோயிலை சென்றடைகிறார். மே 10-ல் உற்சவ சாற்றுமுறையுடன் திருவிழா நிறைவுறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் வெங்கடாசலம், கோயில் துணை ஆணையர் மு.ராமசாமி தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்துவருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in