ஆரூரா... தியாகேசா... முழக்கத்துடன் தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்

தஞ்சாவூரில்  நேற்று நடைபெற்ற பெரிய கோயில் சித்திரை தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தர்கள். படங்கள்: ஆர்.வெங்கடேஷ்
தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற பெரிய கோயில் சித்திரை தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தர்கள். படங்கள்: ஆர்.வெங்கடேஷ்
Updated on
1 min read

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியகோயில் சித்திரை பெருவிழா தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, ஆரூரா.. தியாகேசா.. என்ற முழக்கத்துடன் வடம்பிடித்து தேர் இழுத்தனர்.

தஞ்சாவூர் பெரியகோயிலில் சித்திரை பெருவிழா ஆண்டுதோறும் 18 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த ஏப்.17-ம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரை பெருவிழா தொடங்கியது. தொடர்ந்து, காலை, மாலை வேளைகளில் சுவாமி, அம்பாள் புறப்பாடுராஜவீதிகளில் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 5 மணிக்கு தியாகராஜர், கமலாம்பாள், சோமாஸ்கந்தர், விநாயகர், நீலோத்பலாம்பாள், வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் முத்துமணி அலங்காரத்தில் கோயிலில் இருந்து புறப்பட்டு, மேலவீதியில் உள்ள தேர்நிலை மண்டபத்துக்கு வந்தடைந்தனர்.

பின்னர், தேரில் தியாகராஜர், கமலாம்பாள் எழுந்தருள, தேரோட்டத்தை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், எஸ்.பி. ஆஷிஷ் ராவத், மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, அறநிலையத் துறைஇணை ஆணையர் (பொறுப்பு) சூரியநாராயணன், சூரியனார்கோயில் ஆதீனம் 28-வது குருமகா சந்நிதானம் மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், தருமபுர ஆதீனம் கட்டளை விசாரணை சட்டநாதன் தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்டோர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.

சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளிய தியாகராஜர் - கமலாம்பாள்.
சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளிய தியாகராஜர் - கமலாம்பாள்.

பின்னர், தேருக்கு முன்பாக, விநாயகர், சுப்பிரமணியர் சப்பரங்களும், பின்னால் நீலோத்பலாம்பாள், சண்டிகேஸ்வரர் சப்பரங்களும் பின் தொடர்ந்து செல்ல தியாகராஜர்- கமலாம்பாள் எழுந்தருளிய தேர் பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடி சென்றது. இதில்,ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ‘ஆரூரா, தியாகேசா’என்ற பக்தி முழக்கத்துடன் வடம்பிடித்து தேரை இழுத்து சென்றனர்.

திருமுறைகள் பாடியபடி.. தேருக்கு முன்பாக ஓதுவார்கள் திருமுறைகளை பாடியபடி சென்றனர். மேலும் சிவவாத்தியங்களும் இசைக்கப்பட்டன. நான்கு ராஜ வீதிகள் வழியாக சென்ற தேர் 14 இடங்களில் நிறுத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, அர்ச்சனை நடைபெற்றது.

பக்தர்களின் வசதிக்காக பல்வேறு இடங்களில் தன்னார்வலர்கள் நீர் மோர் பந்தல்கள் அமைத்திருந்தனர். ஆங்காங்கே அன்னதானமும் வழங்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in