

மதுரை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனி திருவிழாவில் நேற்று தங்க மயில் வாகனத்தில் சுவாமியும், தெய்வானையும் எழுந்தருளி வீதி உலா வந்தனர்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா மார்ச் 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் காலையில் தங்கப் பல்லக்கில் தெய்வானையுடன் எழுந்தருளும் சுப்பிரமணிய சுவாமி, மாலையில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
நேற்று முன்தினம் கைபாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. வெள்ளி யானை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளினர்.
நேற்று நடந்த நிகழ்ச்சியில் காலையில் தங்கப் பல்லக்கிலும், இரவில் தங்க மயில் வாகனத்திலும் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளினர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஏப்.6-ம் தேதி சூரசம்ஹாரமும், 7-ம் தேதி பட்டாபிஷேகமும் நடைபெற உள்ளன. முக்கிய விழாவான திருக்கல்யாணம் ஏப்.8-ல் நடைபெறும். ஏப்.9-ல் கிரிவல வீதியில் தேரோட்டம் நடைபெறும். ஏப்.10-ல் தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவுபெறும்.
கோயில் துணை ஆணையர் நா.சுரேஷ் தலைமையிலான பணியாளர்கள் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.