வைகாசி மாத நட்சத்திர பலன்கள் - விசாகம், அனுஷம், கேட்டை

வைகாசி மாத நட்சத்திர பலன்கள் - விசாகம், அனுஷம், கேட்டை
Updated on
2 min read

விசாகம்

மற்றவர்கள் மீது பரிவுகாட்டும் குணமுடைய விசாகம் நக்ஷத்திர அன்பர்களே, நீங்கள் திடீரென்று உணர்ச்சி வசப்படக்கூடியவர். இந்த மாதம் சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். பணம் வருவது அதிகரிக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பதற்கான வாய்ப்புகள் வரும். வெளியூர் பயணங்கள் சாதகமான பலன் தரும். மற்றவர்களின் நலனுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். கவுரவம், அந்தஸ்து உயரும்.

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். ஆர்டர்கள் வருவது திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் உண்டாகலாம். புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

குடும்பத்தில் சுக சௌக்கியம் உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே அன்பான நிலை காணப்படும். பிள்ளைகளின் அறிவு திறமை வெளிப்படும். கலைத்துறையினர் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது உங்களுக்கு எதிர்காலத்தில் ஏற்பட இருக்கும் பிரச்சனைகளை தவிர்க்க வழிவகை செய்யும்.

அரசியல்வாதிகள் கவனமுடன் செயல்பட்டால் மேலிடத்தின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். உங்களிடம் உதவி கேட்டு வருபவர்களை உதாசீனப் படுத்தாதீர்கள். பெண்கள் அடுத்தவர்கள் பிரச்சனையை தீர்த்து வைப்பீர்கள். பயணங்கள் சாதகமான பலன் தரும். பொறுப்புகள் கூடும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் திருப்தி உண்டாகும். கல்வி தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடலாம்.

பரிகாரம்: துர்க்கை அம்மனை செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமையில் எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபட எதிர்ப்புகள் விலகும். காரிய தடை நீங்கும்.

+ பணம் வருவது அதிகரிக்கும்

- வீட்டிலிருந்து வெளியில் தங்க நேரலாம்

அனுஷம்

தானும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், தன்னுடன் பழகுபவர்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அனுஷம் நக்ஷத்திர அன்பர்களே, இந்த மாதம் நிதானமாக பேசுவது காரிய வெற்றிக்கு உதவும். மற்றவர்களின் காரியங்களில் ஈடுபடும் போது கவனம் தேவை. உழைப்பு வீணாகலாம். எனவே திட்டமிட்டு எதையும் செய்வது நல்லது.

தொழில் வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வாடிக்கையாளர்களை அனுசரித்து நிதானமாக பேசுவது நன்மை தரும். கடனுக்கு பொருள்களை அனுப்பும் போது எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகளுடன் கவனமாக பேசுவது நல்லது.

குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாமல் அனுசரித்து செல்வது நல்லது.

கலைத்துறையினருக்கு மிகவும் நன்மை பயக்கும் காலமாக இது அமையும். தொடர்பணிகளால் களைப்படைவீர்கள். வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு உற்சாகமான காலமாக அமையும். கட்சிப் பணிகளுக்காக கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். நேரத்தை வீணாக்காமல் உபயோகப்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம். பெண்களுக்கு திட்டமிட்டு செய்யும் காரியங்கள் வெற்றிகரமாக முடியும். கோபத்தை குறைப்பது நன்மை தரும்.

மாணவர்களுக்கு சகமாணவர்களுடன் பழகும் போது கவனம் தேவை. கல்வி யில் வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

பரிகாரம்: பிரதோஷ காலத்தில் சிவபெருமானையும், நந்தீஸ்வரரையும் வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். குழப்பம் தீரும்.

+ வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

- உழைப்பு வீணாகலாம்.

கேட்டை

மனதில் கொண்ட குறிக்கோளை அடையும் வரை சுறுசுறுப்பாக செயல்பட்டு வெற்றி பெறும் கேட்டை நக்ஷத்திர அன்பர்களே, நீங்கள் உங்களுக்கென்று ஒரு வட்டம் போட்டு அதில் வாழ்பவர். இந்த மாதம் சில சங்கடங்கள் நேரலாம். கெட்ட கனவுகள் உண்டாகலாம். எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். உஷ்ணம் சம்பந்தமான நோய் ஏற்படலாம். எதிர்பார்த்த பணம் கைக்கு வர தாமதமாகும் அதனால் திடீர் பண நெருக்கடி வரலாம். இடம் பொருள் அறியாமல் பேசுவதால் அடுத்தவர்களிடம் மனஸ்தாபம் உண்டாகலாம்.

தொழில் வியாபாரத்தில் திடீர் செலவுகள் உண்டாகும். பணவசூல் தாமதப்படலாம். வீண் அலைச்சல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற பயணம் செல்ல நேரலாம். கூடுதல் பொறுப்புகள் அடுத்தவர் பணியை செய்வது போன்றவையும் வந்து சேரும்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே மனம்விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தருவதாக இருக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலை உண்டாகலாம். கலைத்துறையினருக்கு சோதனைகள் மிகுந்த காலமாக இருக்கும். வாய்ப்புகள் இருந்தாலும் உடல்நலம் ஒத்துழைக்காமல் போகலாம். சிறு பிரச்சனையாக இருந்தாலும் கவனமுடன் இருப்பது நல்லது.

அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றத்தில் தடைகள் இருக்கும். பொறுமையாக கையாள்வதன் மூலம் பெரிய பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். மிகவும் பொறுமையாக செயல்பட வேண்டிய காலகட்டமிது. பெண்களுக்கு எதிர்பாராத செலவு உண்டாகும். அடுத்தவர்களிடம் பழகுவதில் கவனம் தேவை. பணவரத்து தாமதப்படும்.

மாணவர்கள் எந்த ஒரு பாடத்தை படித்தாலும் கவனத்தை சிதறவிடாமல் படிப்பது அவசியம். விளையாடும் போது கவனம் தேவை.

பரிகாரம்: பைரவரை புதன்கிழமைதோறும் வணங்க திருமண தடை நீங்கும். செல்வம் சேரும்.

+ நிதானமாக முடிவு எடுப்பீர்கள்.

- சில சங்கடங்கள் நேரலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in