Published : 09 Dec 2022 03:44 AM
Last Updated : 09 Dec 2022 03:44 AM

108 வைணவ திவ்ய தேச உலா - 83 | திருப்புலியூர் மாயப்பிரான் கோயில்

முனைவர் கே.சுந்தரராமன்

108 வைணவ திவ்ய தேச கோயில்களில், கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் அமைந்துள்ள திருப்புலியூர் மாயப்பிரான் கோயில், 83-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. பஞ்ச பாண்டவர்களுள் பீமனால் புதுப்பிக்கப்பட்டு, இவ்விடத்தில் இருந்து திருமாலை நோக்கி அவர் தவம் புரிந்ததால் இத்தலம் பீம ஷேத்ரம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்குள்ள பெரிய கதாயுதம், பீமன் உபயோகப்படுத்தியது என்று கூறப்படுகிறது. திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளனர்.

நம்மாழ்வார் பாசுரம் (திருவாய்மொழி 8-9-10):

அன்றி மற்றோர் உபாயமென் இவளந்தண் துழாய் கமழ்தல்

குன்ற மாமணி மாட மாளிகைக் கோலக் குழாங்கல் மல்கி

தென் திசைத் திலதம் புரை குட்டநாட்டுத் திருப்புலியூர்

நின்ற மாயப்பிரான் திருவருளாம் இவள் நேர்பட்டதே (3545)

மூலவர் : மாயப்பிரான் | தாயார் : பொற்கொடி நாச்சியார் | தீர்த்தம் : பிரக்ஞாசரஸ் தீர்த்தம், பூஞ்சுனை தீர்த்தம் | விமானம் : புருஷசுக்த விமானம்

தல வரலாறு: ஒருசமயம் சிபிச்சக்கரவர்த்தியின் மகன் விருஷாதர்பி, திருப்புலியூரை (குட்டநாடு) ஆண்டு வந்தார். முன்னர் கொடுக்கப்பட்ட சாபத்தால் கடுமையான நோய்க்கு விருஷாதர்பி ஆளானார். மேலும் குட்டநாட்டில் வறுமையும் ஏற்பட்டது.

செய்வதறியாது அரசர் தவித்த அதே சமயத்தில் சப்தரிஷிகளான அத்திரி, பரத்வாஜர், ஜமதக்கினி, கௌதமர், காசியபர், வசிஷ்டர், விசுவாமித்திர முனிவர்கள் குட்டநாட்டுக்கு வருகை புரிந்தனர். தனக்கும் தன் நாட்டுக்கு ஏற்பட்ட ஆபத்தைப் போக்கினால் மட்டுமே தன்னால் ரிஷிகளுக்கு தானம் தர இயலும் என்று தன் நிலைமையை அவர்களிடம் கூறினார் அரசர். தானம் என்ற சொல்லைக் கேட்டதும் கோபமடைந்த முனிவர்கள், அரசரிடம் இருந்து தானம் பெறுவது மிகப் பெரிய பாவம் என்று கூறி, அரசர் கொடுத்த தங்கத்தையும், பழங்களையும் பெற மறுத்துவிட்டனர்.

ரிஷிகளின் செயலை அறிந்து கோபமடைந்த அரசர், மாபெரும் யாகம் ஒன்றை நடத்தினார். அதில் தோன்றிய தேவதையை அனுப்பி சப்தரிஷிகளை கொல்லத் துணிந்தார். இதையறிந்த ரிஷிகள், தங்களைக் காக்குமாறு வேண்டி, திருமாலை சரண் புகுந்தனர். உடனே திருமால், இந்திரனை புலியாக மாறும்படி செய்து, தேவதையைக் கொல்லப் பணித்தார். அதன்படி தேவதையைப் புலி கொண்டதால் இத்தலம் ‘திருப்புலியூர்’ ஆனது.

முனிவர்களும் திருமால் ஒருவரே பரம்பொருள், மற்ற அனைத்தும் மாயை என்று நினைத்து வழிபட்டனர். திருமாலும் மாயப்பிரானாக முனிவர்களுக்கு காட்சி அளித்தார்.

தலப் பெருமையும் சிறப்பும்: பண்டைத் தமிழகத்தில் 12 உட்பிரிவுகள் இருந்ததாகவும், அதில் ஒரு பகுதி குட்டநாடு என்ற பெயரில் இருந்ததாக தொல்காப்பியம் கூறுகிறது. நம்மாழ்வாரும் தனது பாடலில் இப்பகுதியில் பெரிய நகரம் இருந்ததாகக் கூறியுள்ளார். இப்பகுதி மக்களும் இத்தலத்தை ‘குட்டநாடு திருப்புலியூர்’ என்று அழைக்கின்றனர்.

புருஷசுக்த விமானத்தின் கீழ் உள்ள வட்ட வடிவ கருவறையில் மூலவர் மாயப்பிரான் பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

​​​​​​​

திருவிழாக்கள்: ​​​​​​​மார்கழி மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில் கொடியேற்றி, பத்தாம் நாள் ஆராட்டு நடைபெறுகிறது. தை மாதம் முதல் நாளில் காவடியாட்டம் நடைபெறுகிறது.

தீராத நோய்கள் தீர, திருமணத் தடை நீங்க, குழந்தைப் பேறு கிட்ட, கல்வியில் சிறந்து விளங்க இத்தல பெருமாள் அருள்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x