

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ தீர்த்தவாரி இன்று நடைபெற்றது.
அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் விழாக்களில் பிரசித்தி பெற்றது ஆடிப்பூர விழா. இந்த விழாவுக்கான கொடியேற்றம் கடந்த 1-ம் தேதி நடைபெற்றது. மூலவர் சன்னதி முன்பு உள்ள தங்கக் கொடி மரத்தில் சிவாச்சாரியார்கள் கொடியேற்றினர்.
இதையடுத்து, கோயிலில் உள்ள 5-ம் பிரகாரத்தில் பராசக்தி அம்மன் உற்சவம், 10 நாட்களுக்கு நடைபெற்றது. விழாவின் நிறைவாக, கோயில் வளாகத்தில் உள்ள சிவகங்கை குளத்தில் இன்று தீர்த்தவாரி நடைபெற்றது. வேத மந்திரங்களை முழங்கி தீர்த்தவாரி வழிபாட்டில் சிவாச்சாரியார்கள் ஈடுபட்டனர்.
கரோனா தொற்றுப் பரவல் எதிரொலியாக, பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், பக்தர்களின் அரோகரா முழக்கம் இல்லாமல் தீர்த்தவாரி நடைபெற்று முடிந்தது. மேலும் வழக்கமாக நடைபெறும் தீமிதி திருவிழாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.