மாசி சனிக்கிழமையில் அனுமன் வழிபாடு; வெற்றிலை மாலை சார்த்தினால் ஜெயம்தான்! 

மாசி சனிக்கிழமையில் அனுமன் வழிபாடு; வெற்றிலை மாலை சார்த்தினால் ஜெயம்தான்! 
Updated on
1 min read


மாசி மாத சனிக்கிழமையில், அனுமனை வழிபடுவோம். வெற்றிலை மாலை சார்த்தி வேண்டிக்கொண்டால், இனியெல்லாம் ஜெயம்தான் என்பது ஐதீகம். ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சார்த்தி மனதார வேண்டிக்கொள்ளுங்கள். மங்கல காரியங்களை இனிதே நடத்தித் தருவார் அனுமன். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றியைத் தந்தருளுவார் வீர அனுமன். எதிர்ப்புகளையும் எதிரிகளையும் தவிடுபொடியாக்குவர் அஞ்சனை மைந்தன்.

தெய்வங்களில் அனுமன் வித்தியாசமான தெய்வம் என்கிறார்கள் பக்தர்கள். நாம் வணங்கும் தெய்வங்கள், நின்ற திருக்கோலத்திலோ அமர்ந்த திருக்கோலத்திலோ இருப்பார்கள். சயனக் கோலத்தில் கூட காட்சி தருவார்கள். அந்தத் தெய்வங்களையெல்லாம் நாம் கைகூப்பி வணங்குவோம். ஆராதிப்போம். வழிபடுவோம். நம்முடைய பிரார்த்தனைகளை முறையிடுவோம்.

அனுமன் வித்தியாசமானவர். அனுமனின் பலம் அனுமனுக்கே தெரியாது என விவரித்துள்ளது ராமாயணம். அதேபோல் அனுமன் தன்னை எப்போதுமே கடவுளாகவோ அவதரிப்பாகவோ பராக்கிரமம் நிறைந்தவராகவோ நினைத்துக் கொண்டதே இல்லை. தன்னை அவர், ராம பக்தனாகவே நினைக்கிறார். ராம தூதன் என்பதையே பாக்கியமாகக் கருதுகிறார்.

அதனால்தான், ஆலயங்கள் பலவற்றிலும் அனுமன், தன் இருகைகளையும் கூப்பிய நிலையில் அற்புதமாகக் காட்சி தருகிறார். ‘ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியே எனக்கு சகலமும். நான் அவரின் பக்தன். அவரின் தூதன்’ எனும் பாவனையில் கைக்கூப்பிய படி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.

அனுமன் பராக்கிரமசாலி. பலம் வாய்ந்தவர். அதர்மத்தை அழிப்பதை முன்னின்று செய்பவர். அருளுவதில் ஆனந்தம் கொள்பவர் என்றெல்லாம் விவரிக்கிறது புராணம். செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் அனுமனை தரிசிப்பதும் அனுமன் சாலீசா பாராயணம் செய்வதும் மகத்தான பலன்களைத் தந்தருளும் என்கிறார் ஸ்ரீநிவாச பட்டாச்சார்யர்.

தொடர்ந்து ஒன்பது வாரங்கள்... செவ்வாய்க்கிழமை அல்லது வியாழக்கிழமை அல்லது சனிக்கிழமைகளில் அனுமனை தரிசித்து வந்தால், நினைத்த காரியங்கள் அனைத்தையும் இனிதே முடித்துக் கொடுப்பார் ஆஞ்சநேயர் என்கின்றனர் பக்தர்கள்.

அதேபோல், அனுமனுக்கு துளசி மாலை சார்த்தி வேண்டிக்கொள்வதும் இன்னல்களையெல்லாம் போக்கி அருளும். எடுத்த காரியங்கள் அனைத்தையும் ஜெயமாக்கித் தரும்.

முக்கியமாக, ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சார்த்தி மனதார வேண்டிக்கொள்ளுங்கள். மங்கல காரியங்களை இனிதே நடத்தித் தருவார் அனுமன். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றியைத் தந்தருளுவார் வீர அனுமன். எதிர்ப்புகளையும் எதிரிகளையும் தவிடுபொடியாக்குவர் அஞ்சனை மைந்தன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in