தை பெளர்ணமி... தைப்பூசம்... சண்முக கவசம்! 

தை பெளர்ணமி... தைப்பூசம்... சண்முக கவசம்! 
Updated on
1 min read

முருகப்பெருமானை பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம் பாராயணம் செய்து வேண்டுவோம். தை பெளர்ணமியிலும் தைப்பூசத்திலும் தை வெள்ளிக்கிழமையிலும் அவசியம் பாராயணம் செய்து முருகக் கடவுளை பூஜித்து வந்தால், கடன் தொல்லையில் இருந்து மீளலாம். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே ஒற்றுமை மேலோங்கும் என்கின்றனர் பக்தர்கள்.

தை பெளர்ணமி என்பது விசேஷமான நாள். தைப்பூசம் என்பது முருக வழிபாட்டுக்கு உகந்த அற்புதமான நாள். தை பெளர்ணமியும் தைப்பூசமும் இணைந்து வந்துள்ள இந்த நாளில், முருகக் கடவுளை வணங்குவதும் குடும்பத்தினர் மொத்தமாக இருந்து முருகக் கடவுளிடம் பிரார்த்தனைகள் செய்வதும் மகத்தான பலன்களைத் தந்தருளக்கூடியது.

முருகப் பெருமான், குருவுக்கு நிகரானவர். அப்பனுக்கே பாடம் சொன்னவர். ஞானகுருவாகத் திகழ்பவர். குருவாரம் என்று சொல்லப்படும் வியாழக்கிழமையும் பெளர்ணமியும் தைப்பூசமும் இணைந்து வந்துள்ள அற்புதமான இந்த நாளில், மாலையில் முருக வழிபாடு செய்யுங்கள். ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முகக் கவசம் பாராயணம் செய்து வேலவனை வேண்டுங்கள்.

கந்தசஷ்டி கவசத்திற்கு தங்கள் மனதை பறிகொடுக்காதவர்கள் எவருமில்லை. அவ்வளவு சக்திமிக்க வரிகள் கொண்டவை சஷ்டி கவசம். அதற்கு இணையான வலிமை மிக்கது பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முகக் கவசம்.

பாம்பன் சுவாமிகள் அடிக்கடி கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்து கொண்டிருப்பார். அப்படி ஒரு முறை பாராயணம் செய்தபோது தானும் இதேபோல் ஒரு கவசநூலை முருகப்பெருமான் மீது பாட வேண்டும் என விரும்பினார். அவ்வாறு அவர் பாடியதுதான் சண்முக கவசம்.

இந்த சண்முக கவசமும் கந்த சஷ்டி கவசம் போல் ஆறு கவசங்களை உள்ளடக்கியது என்பது ஆச்சரிய அற்புதம். இதேபோல், முருகப்பெருமானுக்கு முகங்களும் படை வீடுகளும் ஆறு. முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்களும் ஆறுபேர், சரவணபவ எனும் ஆறெழுத்து மந்திரத்துக்குச் சொந்தக்காரர் கந்தபெருமான்.

தை பெளர்ணமியில், தைப்பூசத் திருநாளில், குருவார வியாழக்கிழமையில், குருவாகத் திகழும் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முகக் கவசத்தைப் பாராயணம் செய்து, மாலையில் விளக்கேற்றி முருகக் கடவுளை வணங்குவோம். கடன் தொல்லையில் இருந்து விடுபடச் செய்யும் அற்புதமான கவசம் இது. குடும்பத்தில் கணவன் மனைவி இடையே ஒற்றுமையை மேம்படுத்தும் வழிபாடு இது என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in