தைப்பூசம் ஸ்பெஷல்; வரம் தரும் வல்லகோட்டை முருகன்! 

தைப்பூசம் ஸ்பெஷல்; வரம் தரும் வல்லகோட்டை முருகன்! 
Updated on
2 min read

வல்லகோட்டை முருகப்பெருமான் கோயிலில், ஏனைய விழாக்கள் விமரிசையாக கொண்டாடப்பட்டாலும் தைப்பூசத் திருவிழா விமரிசையகாகக் கொண்டாடப்படுகிறது. இந்தநாளில், ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து வேண்டிக்கொள்கின்றனர். பால் காவடி எடுத்தும் அலகு குத்தியும் வழிபாடுகள் செய்கின்றனர்.

இலஞ்சி எனும் நாட்டில், சங்கொண்டபுரம் எனும் சிறிய நகரத்தை பகீரதன் எனும் அரசன் ஆட்சி செய்து வந்தான். பகீரத ராஜாவைப் பார்க்க நாரத முனிவர் வந்தார். ஆனால் ஆணவமும் கர்வமும் கொண்ட மன்னன், நாரதரைப் பார்க்காமல் புறக்கணித்தான். இதில் கோபமுற்றார் நாரத முனி.

மன்னனின் கர்வத்தை அடக்க நினைத்த நாரத முனிவர், கோரன் எனும் அரக்கனைக் கொண்டு மன்னனுக்குப் பாடம் புகட்ட நினைத்தார். ‘நீ பல தேசத்தை வென்றிருக்கிறாய். பல மக்களை அடிமைப்படுத்தியிருக்கிறாய். இலஞ்சியை மட்டும் உன்னால் வெல்லமுடியாது’ என்று உசுப்பேற்றினார்.

அவ்வளவுதான். கோரன் ஆவேசமானான். ‘ஜெயித்துக் காட்டுகிறேன்’ என்று சூளுரைத்தான். இலஞ்சியை நோக்கிப் போர் தொடுத்தான். அசுரனின் ஆட்டத்தில் பகீரதன் மிரண்டு போனான். அவனுடைய வெறியாட்டத்தில் வீரர்கள் சுருண்டு மடிந்தார்கள். மன்னன் ஓடினான். காட்டுக்குள் சென்று ஒளிந்துகொண்டான். தேசத்தை இழந்தான். அதிகாரத்தை இழந்தான். ஆட்சியை இழந்தான். அரண்மனையையெல்லாம் விடுத்து காட்டுக்குள் திரைமறைவில் வாழ்ந்து வந்தான்.

அங்கே நாரதர் வந்தார். மன்னனைக் கண்டார். ‘எனக்கு நேர்ந்த கதியைப் பார்த்தீர்களா?’ என்று மனம் நொந்து கேட்டான். ‘எல்லாம் சரியாகும். ஆணவத்தை விடு. கர்வத்தை ஒழி. நல்லவழி கிடைக்கப் பெறுவாய்’ என அருளினார் நாரதர்.

அப்போது ஒருநாள்... துர்வாச முனிவரைக் கண்டான் மன்னன் பகீரதன். அவரை வணங்கினான். தேசத்தை இழந்ததை, ராஜாங்கத்தை இழந்ததை, வனவாசத்தில் இருப்பதைத் தெரிவித்து வருந்தினான். ‘எனக்கு நற்கதி அருளுங்கள் சுவாமி’ என வேண்டினான்.

‘அதோ... அங்கே பாதிரி மரம் இருக்கிறதே... அந்த மரத்தடியில் முருகப்பெருமான் இருக்கிறார். வெள்ளிக்கிழமை தோறும் கந்தனை வழிபட்டு வா. உன் ஆணவம் அழியும். இழந்தவை கிடைக்கப் பெறுவாய்’ என அருளினார்.

தொடர்ந்து, முருகப்பெருமானை வேண்டினான் மன்னன். இடைவிடாது பூஜித்து வந்தான். மன்னனின் ஆணவம் அழிந்தது. கர்வம் தொலைந்தது. முருகப்பெருமான் மன்னனுக்குக் காட்சி தந்தார். ‘இழந்ததைத் தந்தேன்’ என அருளினார். மீண்டும் ராஜாங்கம் அவன் வசம் வந்தது. முருகப்பெருமான் அருளிய அதே இடத்தில், அழகிய கோயில் ஒன்றை எழுப்பினான். அனுதினமும் வழிபட்டு வந்தான். அதுவே வல்லக்கோட்டை ஆலயம் என விவரிக்கிறது ஸ்தல புராணம்.

செங்கல்பட்டில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் வழியில், ஸ்ரீபெரும்புதூருக்கு முன்னதாக 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது வல்லக்கோட்டை திருத்தலம். சுமார் 1200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஆலயம் என்று போற்றப்படுகிறது.

அற்புதமான ஆலயம். கோயிலும் திருக்குளமும் என கொள்ளை அழகுடன் திகழ்கிறது ஆலயம். கருவறையில் ஸ்ரீவள்ளி தெய்வானை சமேதராகத் திருக்காட்சி தந்தருள்கிறார். இங்கே உள்ள முருகப்பெருமானின் திருநாமம் ஸ்ரீசுப்ரமணிய சுவாமி.

எந்தத் திருத்தலத்திலும் இல்லாத வகையில் இங்கே உள்ள மூலவர் சுமார் ஏழடி உயரத்தில் கம்பீரமாகக் காட்சி தருகிறார் முருகப் பெருமான்.
செவ்வாய்க்கிழமையிலும் வெள்ளிக்கிழமையிலும் வல்லகோட்டை முருகப் பெருமானை வணங்கி வந்தால், திருமணத் தடைகள் அனைத்தும் விலகும். கல்யாண யோகம் கைகூடிவரும் என்பது ஐதீகம்.

வல்லகோட்டை முருகப்பெருமான் கோயிலில், ஏனைய விழாக்கள் விமரிசையாக கொண்டாடப்பட்டாலும் தைப்பூசத் திருவிழா விமரிசையகாகக் கொண்டாடப்படுகிறது. இந்தநாளில், ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து வேண்டிக்கொள்கின்றனர். பால் காவடி எடுத்தும் அலகு குத்தியும் வழிபாடுகள் செய்கின்றனர்.
அருணகிரிநாதர் இந்தத் தலத்து முருகப்பெருமான் குறித்து ஏழு திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார்.

ஒரகடம் அருகே உள்ள வல்லகோட்டை முருகனை கண் குளிரத் தரிசிப்போம். வரங்கள் அனைத்தும் தந்திடுவான் வல்லகோட்டை சுப்ரமணிய சுவாமி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in