Last Updated : 25 Jan, 2021 10:26 PM

 

Published : 25 Jan 2021 10:26 PM
Last Updated : 25 Jan 2021 10:26 PM

’உங்கள் வேதனைகளை எவரிடமும் சொல்லாதீர்கள்; என்னிடம் சொல்லுங்கள்’ - பகவான் சாயிபாபா அருளுரை

ஒரு தாயின் மீது குழந்தைக்கு நம்பிக்கை இருப்பது போல், நீங்கள் என் மீது நம்பிக்கை வையுங்கள். நானிருக்கிறேன். துவண்டுவிடாதீர்கள் என்பதுதான் பகவான் சாயி சரித்ரா சொல்லும் அருளுரை.

தர்மத்தின்படி நடப்பதுதான் வாழ்க்கை. தூய வாழ்க்கையை மேற்கொள்வதுதான் மனித வாழ்வின் லட்சியம். தர்மத்தின் படி வாழ்வதாலும் தூய வாழ்க்கையை மேற்கொள்வதாலும் துன்பங்களும் துயரங்களுமே வருகின்றன என்று ஒருபோதும் நினைக்காதீர்கள். இருள் இருந்தால்தான் வெளிச்சத்துக்கு மதிப்பு என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். நேர்மை என்பதுதான் சாதனை என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

நெறி பிறழ்ந்தால் அங்கே தர்மமில்லை. முறை தவறி நடந்துவிட்டால், அங்கே இறைவன் வரமாட்டார். நெறியாகவும் முறையாகவும் வாழ்பவர்களைத்தான் நானும் விரும்புகிறேன். ‘தர்மத்துடன் வாழ்வதால்தான் இவ்வளவு துயரங்கள்’ என்று புலம்பாதீர்கள். புலம்பிக் கொண்டிருப்பவர்கள், சரியான நபர்களிடம் ஒருபோதும் தங்கள் வேதனைகளைச் சொல்லுவதில்லை. உங்கள் கவலைகளை, கஷ்டங்களை எவர் விரும்புகிறார்களோ அவர்களிடம் சொல்லி, இன்னும் சிக்கிக் கொள்கிறார்கள்.
உங்களுடைய கவலைகளை என்னிடம் சொல்லுங்கள். உங்கள் கவலைகளைக் கேட்பதற்காகத்தான் நானிருக்கிறேன். கேட்பதற்கு மட்டும் அல்ல... கவலைகளையெல்லாம் போக்குவதைத்தான் என் பணியாக, என் கடமையாக நினைத்து செயலாற்றிக் கொண்டிருக்கிறேன்.

உங்களையெல்லாம் என் பக்தர்களாகவும் என்னைப் பின்பற்றுபவர்களாகவோ நான் நினைப்பதே இல்லை. உங்கள் அனைவரையும் நான் என்னுடைய குழந்தைகளாகத்தான் பார்க்கிறேன். என் குழந்தைகளாகிய உங்களுக்கு ஒரு கஷ்டம் என்றால், ஒரு கவலை என்றால், ஒரு அவமானம் என்றால், ஒரு வேதனை என்றால், அவற்றையெல்லாம் ஒருபோதும் பார்த்துக் கொண்டிருக்கமாட்டேன். அவற்றைக் களைவதே என்னுடைய முதன்மையான பணி என்கிறார் பகவான் சாயிபாபா.
நீங்கள் தேடுகிற அன்பை எல்லோருக்கும் வழங்குங்கள். அந்த அன்பு எல்லோரிடத்திடம் இருந்தும் உங்களுக்குக் கிடைக்கும். அப்படி எல்லோரிடமும் அன்புடனும் ஆதரவுடனும் பிரியத்துடனும் நேசத்துடனும் நீங்கள் இருந்தால், உங்களை இந்த உலகில் முதலில் நேசிக்கிறவன் நானாகத்தான் இருப்பேன் என அருளியுள்ளார் ஷீர்டி சாயிபாபா.

நீங்கள் எவருக்கெல்லாம் அன்பு செலுத்துகிறீர்களோ அவற்றை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். அதேபோல் உங்களை எவரெல்லாம் காயப்படுத்தி துக்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்களோ அவற்றையும் நானறிவேன். எப்போதும் எதற்காகவும் கலங்காதீர்கள். புலம்பாதீர்கள். வருந்தாதீர்கள். இந்த நிலையெல்லாம் ஒருநாள் மாறியே தீரும் என்று நம்புங்கள். இறைவன் இருக்கிறான் என்பதை நம்புங்கள். அவனருள் கிடைத்தே தீரும் என்று உறுதியாக இருங்கள். நம்பிக்கை இருக்கிற இடத்தில்தான் நானும் இருக்கிறேன். நம்பிக்கை உள்ளவர்களைத் தேடித்தான் நான் வருவேன் என அருளியுள்ளார் ஷீர்டி பகவான் சாயிபாபா.

ஒரு தாயின் மீது குழந்தைக்கு நம்பிக்கை இருப்பது போல், நீங்கள் என் மீது நம்பிக்கை வையுங்கள். நானிருக்கிறேன். துவண்டுவிடாதீர்கள் என்பதுதான் பகவான் சாயி சரித்ரா சொல்லும் அருளுரை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x