

ஆஞ்சநேயரை தொடர்ந்து வழிபட்டு வந்தால், வெற்றிலை மாலை சார்த்தி பிரார்த்தித்து வந்தால், நவக்கிரக தோஷங்கள் அனைத்தும் விலகும். சனி பகவானின் பாதிப்புகளில் இருந்தும் தோஷங்களில் இருந்தும் விடுபடலாம்.
வெற்றியைத்தரும் கடவுளாக, வீரத்தை வழங்கும் கடவுளாக, காரியத்தை ஜெயமாக்கித் தரும் வள்ளலாகப் பார்க்கப்படுகிறார், போற்றப்படுகிறார் ஸ்ரீஆஞ்சநேயர். வாயுவின் மைந்தன் என்றும் அஞ்சனை மைந்தன் என்றும் போற்றப்பட்டாலும் தான் ஸ்ரீராமரின் பக்தன் என்று சொல்வதில் அளப்பரிய ஆனந்தம் கொள்பவர் அனுமன் என்கிறது புராணம்.
ராமபக்தனாகவும் ராம தூதனாகவும் தன்னைச் சொல்வதில் நிறைவு கொள்ளும் ஸ்ரீஅனுமன், சகல வல்லமைகளையும் பராக்கிரமங்களையும் கொண்டவர். அதேசமயம், அபய முத்திரை காட்டி, பக்தர்களுக்கு அருள் வழங்கும் திருக்கோலத்தில் நில்லாமல், இருகரங்களையும் கூப்பிய நிலையில், ஸ்ரீராமரையும் சீதாபிராட்டியையும் வணங்குகிற நிலையிலேயே பல க்ஷேத்திரங்களில் திருக்காட்சி தந்தருளுகிறார் அனுமன்.
செவ்வாய், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் அனுமனை வழங்குவது விசேஷமானது, மகத்துவமானது என்று போற்றுகின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள்.
குறிப்பாக, அனுமனுக்கு வெண்ணெய்க் காப்பு செலுத்தி வேண்டிக்கொள்வது எண்ணிலடங்காத நன்மைகளை வழங்கவல்லது. அதேபோல், துளசி மாலையும், வடை மாலையும் சார்த்தி வேண்டிக்கொள்வது காரியங்களை வீரியமாக்கி வெற்றியைக் கொடுக்கும்.
இன்னும் குறிப்பாகச் சொல்லவேண்டுமெனில், ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சார்த்தி வேண்டிக்கொள்வது, தடைப்பட்ட காரியங்களை வெற்றியாக்கிக் கொடுக்கும். மனதில் உள்ள இனம்புரியாத ஏக்கங்களையும் குழப்பங்களையும் பயங்களையும் போக்கும் என்கிறார் ஸ்ரீநிவாஸ பட்டாச்சார்யர்.
தொடர்ந்து ஒவ்வொரு சனிக்கிழமையோ அல்லது ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையோ தொடர்ந்து ஒன்பது வாரம் ஆஞ்சநேய பெருமானுக்கு வெற்றிலை மாலை சார்த்தி வேண்டிக்கொண்டால், வேண்டுவதெல்லாம் கிடைக்கப் பெறலாம். தம்பதி இடையே ஒற்றுமை மேலோங்கும். இழந்த பதவியையும் பொருளையும் மீட்டுத் தந்தருளுவார் ஆஞ்சநேயர் என்கிறார்கள் பக்தர்கள்.
மேலும், ஆஞ்சநேயரை தொடர்ந்து வழிபட்டு வந்தால், வெற்றிலை மாலை சார்த்தி பிரார்த்தித்து வந்தால், நவக்கிரக தோஷங்கள் அனைத்தும் விலகும். சனி பகவானின் பாதிப்புகளில் இருந்தும் தோஷங்களில் இருந்தும் விடுபடலாம்.
வெற்றிலை மாலை சார்த்தி அஞ்சனை மைந்தனை வேண்டிக்கொள்ளுங்கள். வேதனைகள் அனைத்தையும் போக்கி அருளுவார்.