திருஉத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசன விழா; மரகத நடராஜருக்கு சந்தனக்காப்பு களையும் அபிஷேகம்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

திருஉத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு மரகத நடராஜருக்கு சந்தனம்படி களையும் அபிஷேகம் இன்று நடைபெற்றது.

ராமநாதபுரம் அருகேயுள்ள திருஉத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி ஆலயத்தில் மரகத நடராஜர் சன்னதி தனியாக அமைந்துள்ளது. இங்குள்ள நடராஜர் சன்னதியில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆருத்ரா தரிசனம் சிறப்பு பெற்றது. மூலவர் பச்சை மரகத நடராஜர் சிலை என்பதால் ஆண்டு முழுவதும் சந்தனக்காப்பால் பாதுகாக்கப்படுகிறது. இங்கு மட்டும் ஆருத்ரா தரிசனத்துக்கு முதல்நாள் சந்தனக்காப்பு களையும் அபிஷேகமும் நடைபெறுவது சிறப்பாகும். இதைக்காணவும், ஆண்டுக்கு ஒரு நாள் மட்டும் நடராஜர் சந்தனக்காப்பு இன்றி காட்சி தருவதாலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி தரிசனம் செய்வர்.

இந்தாண்டு சந்தனக்காப்பு களையும் அபிஷேகம் இன்று (டிச 29) காலை 8 மணிக்கு நடைபெற்றது. அதனையடுத்து, காலை 9 மணிக்கு பால், பன்னீர், இளநீர், திருமஞ்சனம் உள்ளிட்ட 32 வகையான மகா அபிஷேகம் நடைபெற்றது. இதில் குறைந்தளவிலான பக்தர்களே கலந்து கொண்டனர்.

இன்று இரவு 11 மணிக்கு மேல் மூலவர் மரகத நடராஜருக்கு ஆருத்ரா மகாபிஷேகம் தொங்கும். நாளை (டிச. 30) அதிகாலை அருணோதய காலத்தில் ஆருத்ரா தரிசனம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து, காலை 10 மணிக்கு கூத்தர் பெருமாள் திருவீதி உலாவும், மாலை 5 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகமும், இரவு 8 மணிக்கு மேல் மாணிக்கவாசக சுவாமிகளுக்கு காட்சி கொடுத்து சிறப்பு நாதஸ்வரத்தோடு பஞ்சமூர்த்தி புறப்பாடும், வெள்ளி ரிஷப சேவையும் நடைபெறும்.

இந்தாண்டு கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் வெளிமாவட்ட பக்தர்களுக்கு அனுமதியில்லை, உள்ளூர் பக்தர்கள் பூஜை தட்டுகள், நைவேத்தியம் கொண்டு வந்து சுவாமிக்கு பூஜை செய்யவும் தடைவிதிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in