Published : 13 Nov 2020 10:50 AM
Last Updated : 13 Nov 2020 10:50 AM

குருப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்: கன்னி ராசி வாசகர்களே (15.11.2020 முதல் 13.11.2021 வரை)

ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

நிகழும் சார்வரி வருடம், ஐப்பசி மாதம் 30ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, 15.11.2020 சுக்ல பட்சத்து பிரதமை திதி, சமநோக்குள்ள அனுஷம் நட்சத்திரம், சோபனம் நாமயோகம், கிம்ஸ்துக்கினம் நாமகரணம், நேத்திரம், ஜுவனம் மறைந்த மந்தயோக நாளில் சரத்ருதுவில், சுக்கிரன் ஓரையில், பஞ்சபட்சியில் கோழி ஊன் தொழில் புரியும் காலத்திலும் தசிணாயனப் புன்யகாலத்தில் இரவு 09 மணி 34 நிமிடத்தில் மிதுனம் லக்னத்தில் நாவம்ச சக்கரத்தில் கும்பம் லக்னத்தில் ஆன்மீக அறிவொளி கிரகமான பிரகஸ்பதி எனும் குருபகவான் தன் சொந்த வீட்டிலிருந்து சர வீடாகிய சனிபகாவனின் வீடான மகரம் ராசிக்குள் நுழைகிறார்.

குருபகவான் இப்போது பெயர்ச்சியாகி சனிபகவானுடன் சென்று சேர்வதாலும், சனிபகவானின் ராசிகளாகிய மகரம் மற்றும் கும்பத்திலும் தொடர்ந்து பயணம் செய்ய இருப்பதாலும் உலகெங்கும் பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருக்கும். கைகளில் பணப்புழக்கம் குறையும். மக்கள் தெருவில் இறங்கி போராடுவார்கள். ஆளுங்கட்சிக்கு எதிரான எண்ணங்கள் அதிகரிக்கும். ஆனாலும் தேர்தல் முடிவுகள் ஆள்பவர்களுக்கே சாதகமாகும். சனிபகவான் எதையும் சுருக்குபவர். குருபகவானோ எதையும் பெருக்குபவர்.

பெருகி வளர்க்கும் கிரகம் குருபகவான் சுருக்கி சுண்ட வைக்கும் கிரகமான சனிபகவானுடன் சேர்வதால் உணவுத் தட்டுப்பாடு வரும். வெங்காயம், தக்காளி, கோதுமை தட்டுப்பாடு வரும். பங்குச் சந்தைகளில் பங்குகளின் விலை விழும். தங்கத்தின் விலை மேலும் உயரும். நிலக்கரி, தங்க சுரங்கங்கள் அதிகரிக்கும். பூமியில் புதைந்து கிடக்கும் நிலக்கரி, பெட்ரோகெமிக்கல், தங்கப் படிகங்கள் செயற்கைக் கோள் உதவியுடன் கண்டறியப்படும். பெட்ரோல், டீசல் வாகனங்களின் விலை உயரும். ஆசிரியர்கள், மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவார்கள். பாரம்பரிய தொழில் நிறுவனங்கள் பாதியாக உடையும். கர்ப்பச்சிதைவுகள் அதிகரிக்கும்.
ராணுவம், காவல்துறை, பலப்படுத்தப் படும்.

நாட்டின் எல்லையை பாதுகாக்கும் வீரர்களுக்கு புதிய சலுகைகள் அறிவிக்கப்படும். எலக்ட்ரிக்கல், செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் கருவிகளை இந்தியாவே தயாரிக்கும். வெளிநாட்டு நிறுவனங்கள் பல போட்டிபோட்டு இந்தியாவில் முதலீடு செய்யும். சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட பழமையான வைத்திய முறைகள் பிரபலமாகும். ஆடம்பர வாழ்க்கையிலிருந்து விடுபட்டு மக்கள் யதார்த்தமான வாழ்க்கைக்குள் நுழைவார்கள். ரியல் எஸ்டேட் சூடு பிடிக்கத் தொடங்கும். கல்வி முறை மாறும், கல்வி நிறுவனங்கள், ஆசிரியர்களை கட்டுப்படுத்த புதிய சட்டங்கள் நடைமுறைக்கு வரும். ஆன்லைன் கல்வி முறை இப்போது பிரபலமானாலும் வரும் செப்டம்பர் 2021 முதல் வகுப்பறை கல்வி வழக்கத்திற்கு வரும். மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி நவீன வாழ்க்கையிலிருந்து மக்களை விடுவித்து இயல்பாக, இயற்கையாக வாழ வழி வகுக்கும்.

கன்னி ராசி வாசகர்களே

எதையும் ஆற அமர யோசித்து முடிவெடுக்கும் போக்கு உடையவரான நீங்கள் நல்லது கெட்டது தெரிந்து செயல்படுபவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் அமர்ந்து உங்களை நாலாவிதத்திலும் சின்னாபின்னமாக்கிய குருபகவான் 15.11.2020 முதல் 13.11.2021 வரை உங்களின் பூர்வ புண்ய ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் அமர்வதால் இனி நல்லதே நடக்கும். கடந்த ஓராண்டு காலமாக மருத்துவர்களே உங்கள் விஷயத்தில் முடிவெடுக்க முடியாமல் மயங்கினார்களே! மருந்து, மாத்திரையால் வயிறும் புண்ணானதே! உருக்குலைந்து போயிருக்கும் உங்கள் அழகு, ஆரோக்கியம் மேம்படும்.

அடிக்கடி தொல்லை தரும் வாகனத்தையும் மாற்றுவீர்கள். காற்றோட்டம், குடிநீர் வசதியுள்ள வீட்டுக்கு மாறுவீர்கள். குடும்பத்தில் எப்போதும் சண்டை, சச்சரவாக இருந்ததே! இனி, அமைதி திரும்பும். சிலர் பணம் கொடுத்து உதவுவார்கள் என்று நம்பி வீடு கட்டத் தொடங்கி முடிக்க முடியாமல் தவித்தீர்களே! இனி வீட்டைக் கட்டி முடித்து கோலாகலமாக கிரகப்பிரவேசம் செய்து முடிப்பீர்கள். பாகப்பிரிவினை சுமூகமாகும். பூனையும், எலியுமாக இருந்த கணவன் மனைவி இனி நகமும், சதையுமாக மாறுவார்கள்.

குரு பகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் உங்கள் ரசனை மாறும். முகம் மலரும். சபைகளில் முதல் மரியாதை கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். ஒன்பதாம் வீட்டைப் பார்ப்பதால் தந்தையுடனான மனத்தாங்கல் நீங்கும். இருவரும் மனம்விட்டுப் பேசுவீர்கள். தந்தைவழி உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

15.11.2020 முதல் 05.01.2021 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். இடவசதியில்லாத வீட்டிலிருந்து நல்ல வீட்டுக்கு மாறுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். பிள்ளைகளை அவர்கள் விருப்பப்பட்ட பாடப்பிரிவில், நிறுவனத்தில் சேர்ப்பீர்கள். நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

06.01.2021 முதல் 04.03.2021 வரை திருவோணம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் திடீர் பணவரவு உண்டு. பங்கு வர்த்தகம் லாபம் தரும். சொத்துப் பிரச்சினைகள் தீர்வுக்கு வரும். அடுத்தடுத்த விசேஷங்கள், உறவினர்கள் வருகையால் வீட்டில் சந்தோஷம் பெருகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வழக்குகள் சாதகமாகும். ஆன்மிகத்தில் மனம் லயிக்கும்.

05.03.2021 முதல் 22.05.2021 வரை மற்றும் 23.07.2021 முதல் 13.11.2021 வரை அவிட்டம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் அடுத்தடுத்த பயணங்களால் அலைச்சல் இருக்கும். இளைய சகோதரர் வகையில் மனத்தாங்கல் வரும். சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு உஷ்ணத்தால் உடல்நலக் குறைவும், சிறு விபத்தும் வந்து நீங்கும். புதிதாகச் சொத்து வாங்குவீர்கள். புதிய முயற்சிகள் வெற்றியடையும்.

23.05.2021 முதல் 22.07.2021 வரை சதயம் நட்சத்திரம் ஒன்றாம் பாதத்தில் குருபகவான் செல்வதால் கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.

குருபகவான் 06.04.2021 முதல் 14.09.2021 வரை உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் அதிசார மாகியும், வக்கிரமாகியும் சென்று அமர்வதால் வேலைச்சுமை அதிகரிக்கும். அடுக்கடுக்காக வரும் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் திணறுவீர்கள். சிலரின் நயவஞ்சகச் செயலை நினைத்து வருந்துவீர்கள்.

புது அதிகாரி உங்களை நம்பி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார். சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள்.

இந்த குரு மாற்றம் வாடிப் போயிருந்த உங்களை வளம் பெற வைப்பதுடன், மதிப்பு, மரியாதையையும், வசதி, வாய்ப்புகளையும் அள்ளித் தருவதாக அமையும்.

பரிகாரம்

சிவகங்கை மாவட்டம், பட்டமங்கலத்தில் உள்ள தட்சிணாமூர்த்தியைச் சென்று வணங்குங்கள். வசதி, வாய்ப்புகள் வரும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x