

ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
நிகழும் சார்வரி வருடம், ஐப்பசி மாதம் 30ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, 15.11.2020 சுக்ல பட்சத்து பிரதமை திதி, சமநோக்குள்ள அனுஷம் நட்சத்திரம், சோபனம் நாமயோகம், கிம்ஸ்துக்கினம் நாமகரணம், நேத்திரம், ஜுவனம் மறைந்த மந்தயோக நாளில் சரத்ருதுவில், சுக்கிரன் ஓரையில், பஞ்சபட்சியில் கோழி ஊன் தொழில் புரியும் காலத்திலும் தசிணாயனப் புன்யகாலத்தில் இரவு 09 மணி 34 நிமிடத்தில் மிதுனம் லக்னத்தில் நாவம்ச சக்கரத்தில் கும்பம் லக்னத்தில் ஆன்மீக அறிவொளி கிரகமான பிரகஸ்பதி எனும் குருபகவான் தன் சொந்த வீட்டிலிருந்து சர வீடாகிய சனிபகாவனின் வீடான மகரம் ராசிக்குள் நுழைகிறார்.
குருபகவான் இப்போது பெயர்ச்சியாகி சனிபகவானுடன் சென்று சேர்வதாலும், சனிபகவானின் ராசிகளாகிய மகரம் மற்றும் கும்பத்திலும் தொடர்ந்து பயணம் செய்ய இருப்பதாலும் உலகெங்கும் பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருக்கும். கைகளில் பணப்புழக்கம் குறையும். மக்கள் தெருவில் இறங்கி போராடுவார்கள். ஆளுங்கட்சிக்கு எதிரான எண்ணங்கள் அதிகரிக்கும். ஆனாலும் தேர்தல் முடிவுகள் ஆள்பவர்களுக்கே சாதகமாகும். சனிபகவான் எதையும் சுருக்குபவர். குருபகவானோ எதையும் பெருக்குபவர்.
பெருகி வளர்க்கும் கிரகம் குருபகவான் சுருக்கி சுண்ட வைக்கும் கிரகமான சனிபகவானுடன் சேர்வதால் உணவுத் தட்டுப்பாடு வரும். வெங்காயம், தக்காளி, கோதுமை தட்டுப்பாடு வரும். பங்குச் சந்தைகளில் பங்குகளின் விலை விழும். தங்கத்தின் விலை மேலும் உயரும். நிலக்கரி, தங்க சுரங்கங்கள் அதிகரிக்கும். பூமியில் புதைந்து கிடக்கும் நிலக்கரி, பெட்ரோகெமிக்கல், தங்கப் படிகங்கள் செயற்கைக் கோள் உதவியுடன் கண்டறியப்படும். பெட்ரோல், டீசல் வாகனங்களின் விலை உயரும். ஆசிரியர்கள், மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவார்கள். பாரம்பரிய தொழில் நிறுவனங்கள் பாதியாக உடையும். கர்ப்பச்சிதைவுகள் அதிகரிக்கும்.
ராணுவம், காவல்துறை, பலப்படுத்தப் படும்.
நாட்டின் எல்லையை பாதுகாக்கும் வீரர்களுக்கு புதிய சலுகைகள் அறிவிக்கப்படும். எலக்ட்ரிக்கல், செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் கருவிகளை இந்தியாவே தயாரிக்கும். வெளிநாட்டு நிறுவனங்கள் பல போட்டிபோட்டு இந்தியாவில் முதலீடு செய்யும். சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட பழமையான வைத்திய முறைகள் பிரபலமாகும். ஆடம்பர வாழ்க்கையிலிருந்து விடுபட்டு மக்கள் யதார்த்தமான வாழ்க்கைக்குள் நுழைவார்கள். ரியல் எஸ்டேட் சூடு பிடிக்கத் தொடங்கும். கல்வி முறை மாறும், கல்வி நிறுவனங்கள், ஆசிரியர்களை கட்டுப்படுத்த புதிய சட்டங்கள் நடைமுறைக்கு வரும். ஆன்லைன் கல்வி முறை இப்போது பிரபலமானாலும் வரும் செப்டம்பர் 2021 முதல் வகுப்பறை கல்வி வழக்கத்திற்கு வரும். மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி நவீன வாழ்க்கையிலிருந்து மக்களை விடுவித்து இயல்பாக, இயற்கையாக வாழ வழி வகுக்கும்.
மேஷ ராசி வாசகர்களே
நிறைகுறைகளை அலசி ஆராய்ந்து யாரையும் துல்லியமாகக் கணிக்கும் நீங்கள் மற்ற வர்களின் உணர்வுக்கு மதிப்புக் கொடுப்பவர்கள். கடந்த ஓராண்டு காலமாக ஒன்பதாம் வீட்டில் அமர்ந்திருந்து சின்ன சின்ன ஆசைகளையும் நிறைவேற்றி தந்த குருபகவான் 15.11.2020 முதல் 13.11.2021 வரை உங்களின் பத்தாம் வீட்டில் அமர்வதால் எதிலும் நீங்கள் கொஞ்சம் நிதானித்தே செயல்பட வேண்டும். சிலர் உங்கள் பெயரைத் தவறாகப் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது. உத்தி யோகம், பதவி, கௌரவத்திற்கு பங்கம் வருமோ என்றெல்லாம் கலங்க வேண்டாம்! அவ்வப்போது தர்மசங்கடமான சூழ்நிலைக்கு ஆளாவீர்கள். உங்கள் திறமையையும், உழைப்பையும் வேறு சிலர் பயன்படுத்தி முன்னேறுவார்கள். எந்த வேலைகளையும் நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது. முக்கியக் கோப்புகளை கையாளும்போது அலட்சியம் வேண்டாம். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். விலை உயர்ந்த நகை, பணத்தை இழக்க நேரிடும். வங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்காதீர்கள்.
குரு உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டைப் பார்ப்பதால் சமயோஜிதப் புத்தி வெளிப்படும். சாதுர்யமாகவும், இதமாகவும் பேசிக் காரியம் சாதிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். மழலை பாக்கியம் கிடைக்கும். குரு, சுக வீட்டைப் பார்ப்பதால் தாயாருடன் இருந்த மோதல்கள் விலகும். அவருக்கு ஆரோக்கியம் சீரடையும். வீடு, வாகனம் வாங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். தாய்வழி உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். குரு, ஆறாம் வீட்டைப் பார்ப்பதால் வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பழைய கடன் பிரச்சினை தீரும். பூர்விகச் சொத்து கைக்கு வரும். சங்கம், இயக்கம் இவற்றில் கௌரவப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அரசால் ஆதாயமடைவீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும்.
15.11.2020 முதல் 05.01.2021 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் குரு செல்ல இருப்பதால் விலையுயர்ந்த மின்னணுச் சாதனங்கள் வாங்குவீர்கள். பிள்ளைகளை அவர்கள் ஆசைப்பட்ட கல்வி நிறுவனங்களில் சேர்ப்பீர்கள். குழந்தையில்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். பூர்விகச் சொத்திலிருந்த வில்லங்கம் நீங்கும். அரசுக் காரியங்கள் விரைந்து முடியும். அதிக வட்டிக் கடனை தீர்க்கப் புதுவழி பிறக்கும். நட்பு வட்டாரம் விரியும்.
06.01.2021 முதல் 04.03.2021 வரை திருவோணம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் காற்றோட்டம், தண்ணீர் வசதியுள்ள வீட்டுக்குக் குடிபுகுவீர்கள். தாயாருக்கு இருந்த மூட்டுவலி, நெஞ்சு வலியெல்லாம் குறையும். அவருடன் இருந்த மனக்கசப்புகளும் நீங்கும். கலைகளில் நாட்டம் பிறக்கும். வீடு கட்டத் தாமதமான ப்ளான் அப்ரூவலாகி வரும். புது வாகனம் வாங்குவீர்கள். கோழித்தூக்கம் போய், இனி நிம்மதியான தூக்கம் வரும்.
05.03.2021 முதல் 22.05.2021 வரை மற்றும் 23.07.2021 முதல் 13.11.2021 வரை அவிட்டம் நட்சத்திரத்தில் குருபகாவன் செல்வதால் உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சகோதரிக்குத் திருமணம் முடியும். வெளி மாநிலங்களிலுள்ள புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். புதிதாக வீட்டுமனை வாங்குவீர்கள். ஆனால் கொஞ்சம் அலைச்சலும், செலவினங்களும் இருந்துக் கொண்டேயிருக்கும்.
23.05.2021 முதல் 22.07.2021 வரை சதயம் நட்சத்திரம் ஒன்றாம் பாதத்தில் குருபகவான் செல்வதால் இனந்தெரியாத கவலைகள் வந்துப் போகும். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வாகனத்தில் செல்லும்போது மறவாமல் தலைக்கவசம் அணிந்து செல்லுங்கள்.
குருபகவான் 06.04.2021 முதல் 14.09.2021 வரை உங்கள் ராசிக்கு 11-ம் வீட்டில் அதிசாரமாகியும், வக்கிரமாகியும் பயணிப்பதால் பதுங்கியிருந்த நீங்கள் வெளிச்சத்துக்கு வருவீர்கள். பழைய கடன் பிரச்சினை களுக்கு தீர்வு கிடைக்கும். பிரபலங்கள், நாடாள்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் பெருகும். வியாபாரத்தில் பெரிய அளவில் யாருக்கும் கடன் தர வேண்டாம். அனுபவமிக்க வேலையாட்கள் திடீரென்று பணியை விட்டு விலகுவார்கள். வாடிக்கையாளர்களின் கருத்தைக் கேட்டு கடையை இடமாற்றம் செய்வீர்கள்.
அயல்நாட்டிலிருப்பவர்கள், திடீரென்று அறிமுகமாகுபவர்களை நம்பி புதிய முயற்சிகளில் இறங்க வேண்டாம். பத்தாம் வீட்டில் குரு அமர்வதால் உத்தியோகத்தில் வேலைச்சுமை இருக்கும். விரும்பத்தகாத இடமாற்றமும் இருக்கும். பாராட்டுகள் இல்லையே என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். உங்களுடைய உழைப்பைப் பயன்படுத்தி வேறு சிலர் நல்ல பெயரெடுத்து முன்னேறுவார்கள்.
சக ஊழியர்களால் அவ்வப்போது டென்ஷனாவீர்கள். உங்களைவிட அனுபவம் குறைவானவர்கள், வயதில் சிறியவர்களிடமெல்லாம் நீங்கள் அடங்கிப் போக வேண்டிய சூழல் உருவாகும். எதிர்பார்த்த இடமாற்றம், சம்பளம் சற்றுத் தாமதமாகி கிடைக்கும்.
இந்த குருமாற்றம் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தைத் தெரிந்துகொள்ளவும், சாதிக்க வேண்டுமானால் சகிப்புத் தன்மையும், விடாமுயற்சியும் தேவை என்பதை அறிய வைப்பதாகவும் இருக்கும்.
பரிகாரம்
மதுரை மாவட்டம், குருவித்துறை எனும் ஊரில் வீற்றிருக்கும் ஸ்ரீசித்திர ரத வல்லப பெருமாள் கோவிலில் உள்ள குருபகவானை சென்று தரிசியுங்கள். உத்தியோக ரீதியான பிரச்சினைகள் விலகும்.
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |