Last Updated : 01 Sep, 2020 08:05 PM

 

Published : 01 Sep 2020 08:05 PM
Last Updated : 01 Sep 2020 08:05 PM

குலதெய்வ வழிபாட்டை விட முன்னோர் வழிபாடு முக்கியம்;   பித்ருக்களை நினைத்து உடை, குடை, செருப்பு, போர்வை தானம்!  

மகாளய பட்ச காலத்தில், முன்னோர்களை நினைத்து, தினமும் தர்ப்பணம் செய்யவேண்டும், முன்னோர் ஆராதனை செய்து பித்ருக்களை வழிபடவேண்டும். முக்கியமாக மகாளய பட்சத்தின் ஒவ்வொரு நாளும் நம்முடைய முன்னோர்களை நினைத்து, மனதார வேண்டிக்கொண்டு, குடை, உடை, செருப்பு, போர்வை, பாத்திரங்கள் என்று யாருக்கேனும்ன தானம் செய்யவேண்டும் என்கிறது தர்ம சாஸ்திரம்.

வழிபாட்டுக்கு உரியவர்கள் முன்னோர்கள். ஒரு குடும்பத்துக்கு குலதெய்வம் எப்படி முக்கியமோ, குலதெய்வ வழிபாடு எந்த அளவுக்கு முக்கியமோ அதேபோல் முன்னோர் வழிபாடு என்பது மிக மிக அவசியம். வீட்டில் நடைபெறும் முக்கியமான விசேஷங்களின் போது, குலதெய்வத்தின் சந்நிதியில் நாம் குடும்ப சகிதமாகச் சென்று எப்படி வழிபாடு செய்கிறோமோ... அதேபோல் நம் முன்னோர்களையும் குடும்ப சகிதமாக வணங்கி வழிபடவேண்டும்.

எந்தத் தெய்வத்தின் அருள் கிடைக்க வேண்டும் என்றாலும் குலதெய்வ வழிபாடு செய்தால்தான் மற்ற தெய்வங்களின் அருளைப் பெறமுடியும் என்பார்கள் ஆச்சார்யர்கள். அதேபோல், குலதெய்வத்தின் அருள் கிடைக்க வேண்டும் என்றால், நம் முன்னோர்களை மறக்காமல், தவறாமல் வழிபட வேண்டும். அப்படி முன்னோர் வழிபாட்டை முறையே, தொடர்ந்து செய்துவந்தால்தான் குலதெய்வமே மகிழும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். ஆண்டாண்டு காலமாக, குலதெய்வத்தை நம் முன்னோர்கள் உயிருடன் இருந்த காலங்களில் வணங்கி வந்திருப்பார்கள். வருடம் தவறாமல் குலசாமியை, பொங்கலிட்டு, படையலிட்டு வணங்கி வழிபட்டு ஆராதித்து வந்திருப்பார்கள்.
ஆகவே, இஷ்ட தெய்வத்தை விட குலதெய்வம் முக்கியம். குலதெய்வ வழிபாட்டை விட முன்னோர் வழிபாடு மிக மிக முக்கியம். குருவருள் இருந்தால்தான் திருவருள் கிடைக்கும் என்பார்கள். அதேபோல், முன்னோர் ஆராதனையைச் செய்து வந்தால்தான், குலதெய்வத்தின் அருள் நமக்குக் கிடைக்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

நம் வம்சத்தில், பரம்பரையில் இறந்துவிட்ட மூன்று தலைமுறையினரை அவர்களின் பெயரையும் கோத்திரத்தையும் சொல்லி, எள்ளும் தண்ணீரும் அர்க்யமாக விட்டு, தர்ப்பணம் செய்யவேண்டும். இறந்துவிட்ட நம் முன்னோரின் படங்களுக்கு தினமும் பூக்களால் அலங்கரித்து, ஏதேனும் நம்மால் முடிந்த உணவைப் படையலிடவேண்டும்.

காகம், நம் முன்னோரின் சாயலாகச் சொல்கிறது சாஸ்திரம். எனவே, முன்னோர் படங்களுக்குப் படைத்த உணவில் இருந்து முதலில் காகத்துக்கு உணவிடவேண்டும். அவர்களை நினைத்து, உடை, குடை, செருப்பு, செம்புப் பாத்திரங்கள், புடவை, வேஷ்டி, போர்வை முதலானவற்றை ஒவ்வொரு நாளும் யாருக்கேனும் இயலாதவர்களுக்கோ அல்லது ஆச்சார்யர்களுக்கோ வழங்குங்கள்.

மகாளய பட்சம் என்பது பதினைந்து நாட்கள். நாளைய தினம் செப்டம்பர் 2ம் தேதியில் இருந்து மகாளய பட்ச காலம் தொடங்குகிறது. இந்த பதினைந்து நாட்களும் பித்ருக்கள் என்று சொல்லப்படும் முன்னோருக்கு உரிய நாட்கள். எனவே, இந்த பதினைந்து நாட்களும் அவசியம் பித்ரு வழிபாடு செய்யுங்கள். முன்னோர் ஆராதனையைச் செய்யுங்கள். அவர்களை நினைத்து தானங்கள் செய்யுங்கள்.

இந்த பதினைந்து நாட்களான மகாளய பட்ச புண்ய காலம், முன்னோர்களுக்கான காலம். இறந்துவிட்ட ஆத்மாக்கள், பூமிக்கு வந்து நம்மையெல்லாம் பார்க்கின்ற நாட்கள். இந்த பதினைந்து நாட்களும் முன்னோரின் ஆத்மாக்கள், நம் வீட்டைச் சுற்றியே இருக்கும் என்றும் நம்மையும் நாம் செய்கிற அவர்களுக்கான வழிபாடுகளையும் பார்த்து மகிழ்ந்து ஆசீர்வதிப்பார்கள் என்றும் அதனால் நம் வீட்டில் நடக்காமல் இருந்த சுபநிகழ்வுகள் விரைவில் நடந்தேறும் என்றும் நம் சந்ததி தடையின்றி செழிக்க அருளுவார்கள் என்றும் விவரிக்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

மகாளய பட்ச புண்ணிய காலத்தில், நம் முன்னோர்களை வணங்குவோம். வழிபடுவோம். வளமுடனும் நலமுடனும், செழிப்புடனும் ஆரோக்கியத்துடனும், சகல ஐஸ்வர்யங்களும் பெற்று வாழ்வோம்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x