Last Updated : 01 Sep, 2020 06:52 PM

 

Published : 01 Sep 2020 06:52 PM
Last Updated : 01 Sep 2020 06:52 PM

பித்ரு சாபமா? பித்ரு தோஷமா?  எதிலும் தடையா? மகாளய பட்ச காலத்தில் முன்னோர் வழிபாடு செய்வோம்! 

மகாளய பட்ச புண்ய காலத்தில், தொடர்ந்து தினமும் முன்னோர் வழிபாடு செய்து வந்தால், நமக்குத் தெரியாமலே நம்மைச் சூழ்ந்திருக்கிற பித்ரு சாபமோ பித்ரு தோஷமோ எதுவாக இருந்தாலும் அவை அனைத்தும் நிவர்த்தியாகிவிடும் என்கிறது சாஸ்திரம்.

மகாளய பட்சம் என்பது பதினைந்து நாட்கள். பட்சம் என்றால் பதினைந்து என்று அர்த்தம். புரட்டாசி மாதத்தில் வரக்கூடியது மகாளய பட்சம். பொதுவாக, மாதந்தோறும் வருகிற அமாவாசை என்பது நம் முன்னோருக்கான நாள். நம் முன்னோர்களை வழிபடக் கூடிய நாள். மகாளய பட்சம் என்பது அமாவாசை எனப்படும் முன்னோர் நாளும் அதற்கு முந்தைய பதினைந்து நாட்களும் முன்னோருக்கான நாட்கள். ஆகவே இந்த பதினைந்து நாட்களும் அதையடுத்த மறுநாளான அமாவாசை தினமும் நம் முன்னோரை வணங்கி வழிபடுவதற்கு உரிய நாட்கள் என அறிவுறுத்துகிறது தர்மசாஸ்திரம்.

மகாளய பட்சம் எனப்படும் பதினைந்து நாட்களும் சூட்சும ரூபமாக, முன்னோர்கள் நம் வீட்டுக்கு வருகிறார்கள் என்றும் நம்முடனேயே இருந்து நம் ஆராதனைகளையெல்லாம் ஏற்று, நம்மை முழுவதுமாக ஆசீர்வதிக்கிறார்கள் என்றும் விவரிக்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

மாதந்தோறும் வருகிற அமாவாசை, ஒவ்வொரு தமிழ் மாதத்தின் பிறப்பு, கிரகணகாலம், திதி, மகாளய பட்ச காலத்தின் பதினைந்து நாட்கள் என வருடத்துக்கு மொத்தம் 96 தர்ப்பணங்கள் செய்யவேண்டும் என்றும் இந்தநாட்களில் மறக்காமல் முன்னோர் ஆராதனை செய்யவேண்டும் என்றும் விளக்கியுள்ளார்கள்.

இந்த முறை புரட்டாசி மகாளய பட்ச காலம் என்பது ஆவணி மாதத்திலேயே வருகிறது. கிருஷ்ண ஜயந்தி முதலான பண்டிகைகள் எப்படி முன்னதாகவே வந்ததோ அதேபோல், மகாளய பட்ச காலமும் இந்த முறை ஆவணி மாதத்திலேயே வருகிறது. நாளைய தினம் செப்டம்பர் 2ம் தேதி, ஆவணி 17ம் தேதி மகாளய பட்ச காலம் தொடங்குகிறது.

நாளைய தினமான புதன் கிழமையில் இருந்து, தினமும் முன்னோர் ஆராதனை செய்யுங்கள். அவர்களுக்கு எள்ளும் தண்ணீரும் விட்டு தர்ப்பணம் செய்யுங்கள். தினமும் வீட்டில் செய்யப்படும் சுத்த அன்னம் உள்ளிட்ட உணவை, முன்னோர் படத்துக்கு முன்னதாக வைத்து நைவேத்தியம் செய்து வழிபடுங்கள்.

இறந்துவிட்ட நம் முன்னோர்களின் படங்களுக்கு தினமும் பூக்களால் அலங்கரித்து, தீப தூப ஆராதனைகள் செலுத்துங்கள். ‘நானோ நம் வம்சத்தில் எந்தத் தலைமுறையிலாவது நம் மூதாதையர்களில் ஒருவரோ முன்னோர் ஆராதனையை சரிவர செய்யாமல் விட்டிருந்தால், எங்களை மன்னித்து, எங்களின் ஆராதனையை ஏற்றுக்கொள்ளுங்கள்’ என்று வேண்டுகோளுடன் வேண்டிக்கொள்ளுங்கள்.

அப்படி முந்தைய தலைமுறையில் செய்யாமல் விட்ட முன்னோர் வழிபாடுதான், பித்ரு சாபம் என்றும் பித்ரு தோஷம் என்றும் சொல்கிறது சாஸ்திரம். மூன்று நான்கு தலைமுறைக்கு முந்தைய நம் முன்னோர்கள், சரிவர முன்னோர் வழிபாட்டைச் செய்யாமல் இருந்தால், நாம் பிறக்கும் போதோ நம் வீட்டில் வேறு எவரேனும் பிறக்கும் போதோ, நமக்கு வாரிசுகள் பிறக்கும் போதோ அந்த வழிபாடு செய்யாதது... தோஷமாகவும் சாபமாகவும் இப்போது இருப்பவர்களின் தலையில் வந்துவிடியும் என ஞானநூல்கள் விவரித்து எச்சரிக்கின்றன.

ஆவணி மாதம் 17ம் தேதியும் செப்டம்பர் மாதம் 2ம் தேதியுமான நாளைய தினம் (புதன் கிழமை) மகாளய பட்ச காலம் தொடங்குகிறது. நாளையில் இருந்து அடுத்து வரக்கூடிய பதினைந்து நாட்களும் நம் முன்னோரை நாம் வணங்கக் கூடிய நாட்கள் .நம் முன்னோர்களை நாம் வழிபடக் கூடிய நாட்கள். நம் முன்னோர்கள் நம் வீட்டுக்கு சூட்சுமமாக வந்து, நம் கஷ்டங்களையும் துக்கங்களையும் வேதனைகளையும் தோல்விகளையும் பார்த்துக்கொண்டிருக்கிற நாட்கள்.

எனவே, நாளை முதல் நம் முன்னோரை ஆராதிப்போம். தினமும் அவர்களுக்கு உணவு நைவேத்தியம் செய்வோம். காகத்துக்கு உணவிடுவோம். இறந்துவிட்ட நம் அப்பா, அம்மாக்களை நினைத்து, தாத்தா பாட்டிகளை நினைத்து, மற்றும் உள்ள சித்தப்பா பெரியப்பாக்களை நினைத்து, தினமும் ஒருவருக்கேனும் ஏதோவொன்று தானம் செய்வோம். உணவு வழங்கலாம். நான்கு இட்லியேனும் வாங்கிக் கொடுக்கலாம். மதிய உணவாக ஒரு தயிர்சாதப் பொட்டலமாவது வழங்கலாம்.

ஒருநாள் எவருக்கேனும் குடை வழங்கலாம். இன்னொரு நாள் யாருக்காவது செருப்பு வாங்கிக் கொடுக்கலாம். மற்றொரு நாள், வேஷ்டியோ புடவையோ வாங்கித் தரலாம். இப்படி, நம் முன்னோரை நினைத்து நாம் வணங்குவதும் வழிபடுவதும் தானம் கொடுப்பதும் நம் முன்னோர்களால் கவனிக்கப்படுகிறது என்பதாக ஐதீகம்.
நாம் செய்யும் ஆராதனையால் முன்னோர்கள் மகிழ்வார்கள் என்றும் நமக்கு பரிபூரண ஆசியை வழங்குவார்கள் என்றும் அந்த ஆசியால், நம் சாபமெல்லாம் பறந்தோடும் என்றும் விளக்குகிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

மகாளய பட்ச புண்ய காலத்தில் முன்னோரை தினமும் வணங்குவோம். பித்ரு சாபத்தில் இருந்தும் பித்ரு தோஷத்தில் இருந்தும் விமோசனம் பெறுவோம். இதுவரை பட்ட கஷ்டங்களில் இருந்தும் துக்கத்தில் இருந்தும் விடுபட்டு, உயர்ந்த நிலைக்கும் உன்னத நிலைக்கும் செல்வோம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x