அஷ்டமி... அஷ்டலட்சுமிகள்... பைரவ வழிபாடு! 

அஷ்டமி... அஷ்டலட்சுமிகள்... பைரவ வழிபாடு! 
Updated on
1 min read

அஷ்டமியில் எந்த நல்ல காரியமும் செய்யமாட்டோம். அதேசமயம் அஷ்டமி என்பது பைரவரை வழிபட உகந்த அற்புதமான நாள். வீட்டில் சுபகாரியம் நடத்தாத போதும் நல்ல நிகழ்வுகளை எதையும் நடத்தாத போதும், பைரவ வழிபாடு மட்டும் அஷ்டமியில் கடைப்பிடிக்கப்படுகிறது.


என்ன காரணம்? ஏனிப்படி?


பைரவருக்கு மிகவும் உகந்த நாள் அஷ்டமி என்கிறது புராணம். பொதுவாகவே,மக்கள் அஷ்டமி அன்று எந்த நல்ல காரியமும் செய்ய மாட்டார்கள்.அதன் உண்மைக்காரணம் வேறு.


அனைத்து ஜீவராசிகளுக்கும் எல்லா ஐஸ்வர்யங்களையும் அள்ளித்தரும் பணியினை நிறைவேற்றுபவர்கள் அஷ்ட லட்சுமிகள்.சொர்ணபைரவரிடம்,சக்திகளைப் பெற்று தாங்கள் பெற்ற சக்தியைக் கொண்டு, உலக பக்தர்களுக்கு விநியோகம் செய்துவருகின்றனர் .தாங்கள் பெற்ற சக்தி குறையாமல் இருப்பதற்காக, ஒவ்வொரு அஷ்டமியிலும் பைரவரை வழிபாடு செய்து தங்கள் சக்தியை பெருக்கிக் கொள்கின்றார்கள் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.


.அஷ்டமிஅன்று, அஷ்டலட்சுமிகளே பைரவ வழிபாட்டில் ஈடுபடுவதால்,அவர்களால் அன்று நடைபெறும் நற்காரியங்களில் ஹோம, பூஜை, நியமங்களுக்கு வரமாட்டார்கள் என்பதால், அஷ்டமியில் நற்காரியங்கள் ஏதும் செய்வதில்லை என்றும் சொல்லப்படுகிறது. .


ஆகவே,அஷ்ட லட்சுமிகளே வழிபடும் அந்த அஷ்டமி நன்னாளில்,நாம் அனைவரும் நேரடியாக பைரவரை வணங்கிவந்தால், அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.


தேய்பிறையை விட வளர்பிறை காலத்துக்கே முக்கியத்துவம் தருகிறோம். அதேபோல், அஷ்டமியன்று எந்த நிகழ்வுகளையும் தொடங்குவதில்லை. ஆனால் தேய்பிறை அஷ்டமி என்பது பைரவருக்கு உகந்த நாள். இந்தநாளில் பைரவ வழிபாடு, துஷ்ட சக்தியையெல்லாம் விரட்டியடிக்கும். நல்லவற்றையெல்லாம் நமக்குக் கொண்டுவந்து சேர்க்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.


நாளை ஜூன் 13ம் தேதி, சனிக்கிழமை தேய்பிறை அஷ்டமி. இந்த நாளில், மறக்காமல் பைரவரை வழிபடுவோம். பைரவரை நினைத்து, தெருநாய்களுக்கு உணவிடுவோம். நம் பாவங்களில் இருந்து நம்மை விலக்கி, நம் வாழ்வில் உள்ள தடைகளையெல்லாம் தகர்த்தருள்வார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in