Published : 03 Jun 2020 05:50 PM
Last Updated : 03 Jun 2020 05:50 PM

வரமெல்லாம் தரும் வைகாசி விசாக வழிபாடு;  முருகனை நினைத்து எலுமிச்சை சாதம்! 

வைகாசி விசாக நாளில், மனமொன்றி வழிபாடு செய்வோம். முருகப்பெருமானை நினைத்து, எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து, இயலாதவர்களுக்கு வழங்குவோம். கேட்கும் வரம் அனைத்தும் தந்தருள்வான் வடிவேலன்.

பங்குனி மாதத்தின் உத்திரம் போல, தை மாதத்து பூசம் போல, கார்த்திகை மாதத்தின் கார்த்திகை போல, வைகாசி மாதத்தில் விசாகம் முருகக் கடவுளுக்கு உகந்த அற்புதமான நாள். பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, தைப்பூசம், வைகாசி விசாகம் முதலான நாட்களில், முருகப்பெருமானுக்கு விரதம் இருப்பார்கள் பக்தர்கள். அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று முருகன் சந்நிதியில், தரிசனம் செய்து தங்கள் வேண்டுதலையெல்லாம் வைத்து முறையிடுவார்கள்.


அதேபோல், வீட்டில் கந்த வழிபாடு செய்வது ரொம்பவே விசேஷம். வைகாசி விசாக நாளில், வீட்டை சுத்தமாக்கி, பூஜையறையை சுத்தம் செய்து, கோலமிடவேண்டும். விளக்குகளுக்கு சந்தனம் குங்குமமிட்டு, விளக்கேற்றவேண்டும்.


முருகப்பெருமானுக்கு செந்நிற மலர்கள் உகந்தவை. அரளி, செம்பருத்தி முதலான மலர்களைக் கொண்டு வேலவனை அலங்கரிக்கலாம். கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்யலாம்.


வீட்டில் விளக்கேற்றி, முருகப்பெருமானுக்கு சர்க்கரைப் பொங்கல் அல்லது எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்யுங்கள். முடிந்தால், இயலாதவர்களுக்கு எலுமிச்சை சாதம் வழங்குங்கள்.


குருவாரம் என்று சொல்லப்படும் வியாழக்கிழமை, முருகப்பெருமானுக்கும் உகந்தது. கந்தக் கடவுளை ஞானகுரு என்கிறது புராணம். அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பையன் என்று சொல்லி மகிழ்கிறோம். எனவே ஞானகுரு முருகப் பெருமானை, வேலவனுக்கு உகந்த வைகாசி விசாக நட்சத்திர நாளில், வணங்கி வளம் பெறுவோம்.
கடன் உள்ளிட்ட கவலைகளில் இருந்தும் வழக்கு உள்ளிட்ட பிரச்சினைகளில் இருந்தும் நம்மை விடுவித்து அருளுவார் வேலவன்.


நாளை 4.6.2020 வியாழக்கிழமை, வைகாசி விசாகம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x