திருநின்றவூரில்... இதயக்கோயில்! - மனதில் கோயில் கட்டிய பூசலார்!

திருநின்றவூரில்... இதயக்கோயில்! - மனதில் கோயில் கட்டிய பூசலார்!
Updated on
2 min read

வி.ராம்ஜி


மனதுக்குள் கோயில் கட்டி, கும்பாபிஷேகம் நடத்தத் தேதியும் குறித்த சரிதம்... சிவனின் பேரருளைச் சொல்லும் அற்புதம்.
செல்வம் முக்கியமில்லை. மனமும் எண்ணமுமே முக்கியம் என்பதையும் அவருடைய பக்தியையும் உலகுக்கு உணர்த்த விரும்பினார் சிவபெருமான். அவர் மிகச் சிறந்த சிவபக்தர். எண்ணமும் செயலும் எப்போதும் சிவநினைப்பிலேயே இருந்தது. எப்போதும் சிவநாமத்தையே சொல்லிக் கொண்டிருந்தார். அவர்... பூசலார்!


ஒருநாள்... என் அப்பன் சிவனுக்கு ஒரு ஆலயம் கட்டினால் என்ன? என்று தோன்றியது பூசலாருக்கு. ஆனால் கையில் காசு இல்லை. செல்வந்தர்களிடம் சிவ பக்தர்களிடம் பொருளுதவி கேட்டார். கிடைக்கவில்லை. அலைந்து அலைந்து நொந்துபோனார்.


அப்போதுதான் அவருக்கு அந்த யோசனை வந்தது. ஒரு பிரமாண்டமான சிவாலயத்தை, தன் மனதுக்குள்ளேயே கட்டத் துவங்கினார் பூசலார். ஆகம விதிப்படி ஒரு கோயில் எப்படி கட்டவேண்டுமோ அதன்படி, மனதுக்குள் கட்ட ஆரம்பித்தார்.


முதல்கட்டமாக, ஓரிடத்தில் அமர்ந்து கொண்டார். கண்கள் மூடினார். சிவனாரை வேண்டினார். , மளமளவென வேலைகளை மனதுக்குள்ளேயே முடுக்கிவிட்டார். கோபுரம், விமானம், பலிபீடம், கொடிமரம் என பார்த்துப்பார்த்து மனதாலேயே கட்டிய ஆலயத்திற்கு குடமுழுக்கு செய்ய நாளும் குறித்தார் பூசலார்.


அதே வேளையில்... காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த ராஜசிம்ம பல்லவ மன்னன், சிவனாருக்கு அழகிய, கருங்கல்லால் செய்யப்பட்ட ஆலயத்தைக் கட்டி முடித்திருந்தான். கும்பாபிஷேகம் நடத்துவதற்கு நாள் குறித்தான்.


பூசலார் குறித்த நாளும் மன்னன் குறித்த நாளும் ஒரேநாளாக அமைந்ததுதான் சிவ விளையாட்டு. . அங்கே... சிவனாரின் திருவிளையாடல் துவங்கியது!


மன்னனின் கனவில் தோன்றிய சிவனார், ‘கும்பாபிஷேகத் தேதியை மாற்ற முடியுமா? திருநின்றவூரில் என் பக்தர் ஒருவர் எனக்காக, அழகாக கோயில் கட்டியிருக்கிறார். அங்கே நாளைய தினம் கும்பாபிஷேகம். நான் அங்கேதான் இருப்பேன். ஆகவே தேதியை மாற்ற முடியுமா?’’ என்று கேட்டார்.


அதைக் கேட்டு அதிர்ந்தான் மன்னன். ராஜாவான நாம் கட்டிய ஆலயத்தை விட, அந்தக் கோயிலுக்கு முக்கியத்துவம் தருகிறாரே இறைவன் என சிந்தித்தவர், தன் படைகளுடன் திருநின்றவூருக்கு உடனே கிளம்பிச் சென்றான்.


அங்கே, அந்த ஊரில் எந்தக் கோயிலும் புதிதாகக் கட்டப்படவில்லை. ஊர்மக்களும் ‘இங்கே யாரும் கோயிலும் கட்டலை’ என்று தெரிவித்தனர்.
அப்படியே விசாரித்தபடியே வந்தவர், பூசலாரிடம் விஷயத்தைச் சொல்லிக் கேட்க, ‘ஆமாம், கோயில் கட்டி முடித்து, நாளைய தினம் கும்பாபிஷேகம் நடக்கப் போகிறது’ என்றார். அதைக் கேட்டு குழம்பிய மன்னன், ‘அந்த ஆலயம் எங்கே’ என்று கேட்டார்.


தன் நெஞ்சுப் பகுதியைத் தொட்டு, ‘இங்கேதான் இருக்கிறது கோயில்’ என்று, கோயில் கட்டுமானத்தின் முழுப்பணிகளையும் எடுத்துரைக்க... அதிசயித்த மன்னர், பூசலாரின் காலில் விழுந்து வணங்கினான்.


பூசலாரின் இறைபக்தியை உணர்ந்த மன்னன், அவரது வேண்டுகோளின் படி மனதில் கட்டிய ஆலயத்தின் அமைப்பைப் போலவே திருநின்றவூரில் ஆலயம் எழுப்பினான். பூசலாரும் நாயன்மார்களில் ஒருவரானார்!


திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூரில் உள்ள கோயிலின் இறைவன் ஸ்ரீஇருதயாலீஸ்வரர். இங்கு வந்து இருதயாலீஸ்வரரை வேண்டிக் கொண்டால், இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் குணமாகும். இதய நோய் பூரணமாக குணம் பெறும். மனோதிடம் பெருகும். மங்கல நினைவுகள் இதயத்தில் குடியிருந்து வழிநடத்தும் என்பது ஐதீகம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in