Published : 08 Oct 2019 10:06 AM
Last Updated : 08 Oct 2019 10:06 AM
வி.ராம்ஜி
’ஏழு தலைமுறை ஏழு தலைமுறை என்று சொல்கிறோம். அதற்கு காரணமும் சொல்லிவைத்திருக்கிறது சாஸ்திரம்.
ஜீன்களை ' சுக்ல தாது ' என்பார்கள் . சுக்ல தாதுவில் 84 அம்சங்கள் இருக்கின்றன .
அவற்றுள் 28 அம்சங்கள் தந்தை, தாய் ஆகியோர் உட்கொள்ளும் உணவால் உருவாகக் கூடியவை . மற்ற 56 அம்சங்கள் முன்னோர்களால் கிடைக்கக் கூடியது .
தந்தையிடமிருந்து 21 அம்சங்கள்; பாட்டனிடமிருந்து 15 அம்சங்கள்; முப்பாட்டனிடமிருந்து 10 அம்சங்கள் -- ஆக 46 அம்சங்கள் கிடைக்கின்றன . பாக்கி உள்ள பத்து அம்சங்கள் முன்னோர்களிடமிருந்து கிடைப்பவை .
நான்காவது மூதாதையிடமிருந்து 6 அம்சங்களும், ஐந்தாவது மூதாதையிடமிருந்து 3 அம்சங்களும், ஆறாவது மூதாதையிடமிருந்து ஒரு அம்சம் என 10 அம்சங்கள் கிடைக்கின்றன.
எனவே, ஒரு குழந்தையிடம் அதன் தந்தையுடன் சேர்த்து ஏழு தலைமுறையினரின் சுக்ல தாதுக்களின் பங்குகள் இடம்பெறுகின்றன . எனவேதான், தலைமுறை ஏழு என்று தர்ம சாஸ்திரம் சொல்கிறது.
நெருங்கிய தொடர்பு கொண்ட தந்தை , பாட்டன் , முப்பாட்டன் -- இவர்கள் மூவருக்கும் திவசத்தில் தில தர்ப்பணம் கொடுப்பதற்கு இதுவே காரணம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
மேலும், எவரொருவர், தொடர்ந்து அமாவாசை உள்ளிட்ட தர்ப்பண தினங்களில், தந்தை, பாட்டன், முப்பாட்டன் என மூவருக்கும் தர்ப்பணம் செய்து வழிபடுகிறாரோ... அவர்களின் சந்ததி தடைப்படாமல் இருக்கும் என்றும் முன்னோர் ஆசி பரிபூரணமாக கிடைத்து, இனிதே வாழ்வார்கள் என்றும் தெரிவிக்கிறது சாஸ்திரம்.