ஈசன் எந்தை இணையடி நீழலே: நால்வர்- அப்பர்

ஈசன் எந்தை இணையடி நீழலே:  நால்வர்- அப்பர்
Updated on
2 min read

இறைவனிடம் ஈடில்லாப் பற்றுக் கொண்டவர்களை அடியார்கள் என்று சொல்வது மரபு. இந்த அடியார்களை இறைவனே தனது அருளால் உருவாக்குகிறார் என்பதற்குச் சான்று மருணீக்கியார் வாழ்க்கைதான். சிவனைப் போற்றித் துதிக்கும் குலத்தில் புகழனாருக்கும் மாதினியாருக்கும் பிறந்தவர் மருணீக்கியார். இவருக்கு திலகவதியார் என்ற சகோதரி உண்டு.

சிவனைப் போற்றும் சைவ குலத்தில் பிறந்த மருணீக்கியார், அப்போது பிரபலமாக இருந்த சமண மதத்தில் இணைந்தார். இதற்காக தருமசேனர் எனத் தன் பெயரை மாற்றிக்கொண்ட அவர், பிரச்சாரம் செய்தது காரணமாகச் சமணம் மென்மேலும் பரவியது. சிறந்த சிவ பக்தையான அவரது சகோதரிக்குத் தன் சகோதரன் குல வழக்கத்தை விடுத்து விலகிச் செல்வது பிடிக்காமல் தான் வணங்கும் சிவனிடமே முறையிடுகிறார். மருணீக்கியாருக்கு சூலை நோய் வயிற்றில் வந்து தாக்கியது. தாள முடியாத வலியைப் போக்க சமணத் துறவிகள் மருத்துவம் பார்த்தனர். பயன் ஒன்றும் ஏற்படவில்லை.

இதனிடையே திலகவதியாரைக் கண்ட அவர் தன் நிலை கூறி வருந்த, சிவனைப் போற்றிப் பாடச் சொன்னார் திலகவதி. அவரும் சிவனை நோக்கி ‘கூற்றாயினவாறு’ என்று தொடங்கும் பதிகத்தைப் பாட, அவரது சூலை நோய் நீங்கியது. இதற்குப் பின்னர் திருநாவுக்கரசர் என்று அழைக்கப்பட்ட அவர் அது முதல் சைவ சமயத்தையே போற்றினார். இவருக்கு நிகழ்ந்த இந்த அற்புதத்தைக் கண்ட பலரும் சைவத்தைப் பின்பற்றத் தொடங்கினார்.

மகேந்திர வர்ம பல்லவன் சமண மதத்தை ஆதரித்தான். தன் நாட்டுக் குடிமகனான திருநாவுக்கரசர் சைவத்தைத் தீவிரமாக ஆதரிப்பதைக் கேள்விப்பட்ட மன்னன் தன் அதிகாரத்தால் அவரைத் துன்புறுத்தத் தொடங்கினான். திருநாவுக்கரசர் ஏழு நாட்களுக்கு சுண்ணாம்பு அறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்தார். ஆனால் உடல் வேகாது உயிர் பிழைத்தார். அவர்கள் அளித்த நஞ்சு கலந்த பால் சோறை உண்ட பின்னும் அதிசயமாக உயிர் பிழைத்தார். அவரது தலையை இடறச் செய்ய அனுப்பப்பட்ட யானை அவரைச் சுற்றி வந்து வணங்கிச் சென்றது. கல்லைக் கட்டிக் கடலில் போட்டார்கள் அப்போதும் திருநாவுக் கரசர், `கற்றுணைப் பூட்டியோர் கடலினுள் பாய்ச்சினும் நற்றுணை ஆவது நமச்சிவாயவே’ என்று பாடி சிவ வழிப்பாட்டினில் உறுதியாக இருந்தார். இவரது உறுதியைக் கண்ட மகேந்திர வர்ம பல்லவ மன்னனும் சைவ சமயத்திற்கு மாறினான்.

வயதில் இளைய நாயனாரான திருஞான சம்பந்தர், இவரை மரியாதையும் அன்பும் கலந்து அப்பர் என்று அழைத்தார்.

அப்பரின் பாடல்கள் தமிழ்ச் சுவையும் பக்திச் சுவையும் தோய்ந்தவை. உதாரணத்திற்கு ஒன்று:

மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்

மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

ஈச னெந்தை யிணையடி நீழலே

ஈசனுடைய அடிகளில் சரணடைந் தால், மர நிழல் தரும் குளுமை போன்று இருக்கும் என்று கூறிய அப்பர் அடிகள், அந்த நிழலானது குற்றமற்ற வீணை இசை போன்றது; இளம் மாலையில் தோன்றிய நிலவின் குளுமையை ஒத்தது. வீசுகின்ற தென்றல் போன்றது. இளவேனிற் காலத்தின் உயிர்ப்பைக் கொண்டது. தாமரை மலர்களைச் சுற்றும் வண்டுகளைக் கொண்ட குளம் போன்றது என்கிறார். அவர் உதாரண மாகக் கூறிய அனைத்தும் மனதுக்கு இனிமை சேர்ப்பவை. அனைத்து இனிமைகளையும் ஒரு சேர அளிப்பது இறைவனது பாத நிழலே என்கிறார் அப்பர்.

அப்பர் பாடிய தேவாரப் பதிகங்கள் மொத்தம் 49,000 என நம்பப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in