Last Updated : 13 Mar, 2014 01:16 PM

 

Published : 13 Mar 2014 01:16 PM
Last Updated : 13 Mar 2014 01:16 PM

நடராச வடிவம்

ஆனந்த நடராஜனின் திருவுருவம் ஐந்தொழில்களை காட்டுவதுடன் ஞானமயமாகிய அறிவுவெளியின் இயல்பையும் அறிவுறுத்துகிறது.

புலிக்கால் முனிவராகிய வியாக்கிரபாதரும் ஆதிசேடனுடைய அவதாரமாகிய பதஞ்சலி மகாமுனிவரும் தவம் புரிந்து நடராஜ மூர்த்தியைக் கண்டு ரசிக்கும் பேறு பெற்ற இடம் இந்தத் தில்லைவனம். அண்டமும் பிண்டமும் ஒரே தன்மையுடையவை. பிண்டத்தில் இடை, பிங்கலை, சுழமுனை நாடிகளுக்கு ஒப்பாக அண்டத்தில் இலங்கை, இமயம், தில்லை எனும் மூன்று தலங்களும் அமைந்திருக்கின்றன.

இடைநாடி இலங்கைக்கு நேராகச் செல்லும், பிங்கலை நாடி நன்மைமிக்க இமயமலைக்கு நேராகப் போகும், நாடுதற்குரிய சுழிமுனை நாடி தில்லை வனத்திற்கு நேரே போய்க்கூடும் எனவும், தாம் அந்தத் திருத்தலத்தில் எப்போதும் ஆனந்த நடனம் செய்வதாகவும் நடராஜ மூர்த்தி ஆதிசேடனுக்குக் கூறினார். அண்டத்திலுள்ள சிதம்பரமும், பிண்டத்திலுள்ள சுழமுனை நாடியும் நம்முள் ஒத்து நடக்கின்றன.

சித்+அம்பரம்= சிதம்பரம். அம்பரம் எனில் ஆகாசம், வெளி எனப் பொருள்பட்டும், அம்பலம் எனத் திரிவுபட்டும் நிற்கும்.

சிதாகாசமாகிய சபையில் நடனம் புரியும் இறைவனுக்கும் உணர்வு அற்ற பிரபஞ்சம், தூல உருவமாகவும், உணர்வு நிறைந்த பிரபஞ்சம் உறுப்புகளாகவும் இச்சை ஞானக் கிரியையகள் காரணமாகவும் உயிர்களுக்கு அறிவினை ஆக்கி வைப்பது பயனாகவும், ஐந்தொழில் விரிவே தொழிலாகவும் அமைந்துள்ளன.

சிதம்பரத்தில் சிற்சபையில் நடராஜ மூர்த்திக்கு வலப்பக்கத்தில் களங்கமில்லாத ஆகாச வடிவமாகிய சிதம்பர ரகசியம் இருக்கிறது. காஞ்சியில் பூமி வடிவமாகவும் திருவானைக்காவில் நீர் வடிவமாகவும், திருவண்ணாமலையில் நெருப்பு வடிவமாகவும் திருக்காளத்தியில் காற்று வடிவமாகவும் சூரிய விம்பத்தில் சூரிய வடிவமாகவும் சோமநாதத்தில் சந்திர வடிவமாகவும் எல்லா உயிர்களிலும் பசுபதியாகவும் அமர்ந்த இறைவன் சிதம்பர ரகசியத்தில் ஆகாச மூர்த்தமாக விளங்குகிறான்.

ஆகாசம் ஒலியிலிருந்து பிறக்கிறது; இறைவனுடைய கையிலேந்திய டமருகம் ஒலிக் குறிப்பின் வழிவந்த ஆகாயத்திற்கு உற்பத்தித் தாளமாயிற்று. ‘பயம் வேண்டாம்’ என்னும் குறிப்பைக் காட்டும், அபயக்கை காத்தல் தொழிலைச் செய்கிறது. நெருப்பு அழித்தல் தொழிலைக் காட்டுகிறது.

நாம் வெறும் பொம்மைகள்; கயிற்றை இயக்கி நம்மை ஆட்டுபவன் நடராஜன். அதனால்தான், தரிசிக்க முக்தி தரும் சிவசிதம்பரம் என்று ஆன்றோர் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x