

கர்ணன் வாழ்ந்த காலத்தில் தன்னுயிர் காக்கும் கவச குண்டலங்கள் உட்பட எல்லாவற்றையும் தானமாகக் கொடுத்தவன். தானத்தின் அடையாளம் அவன். தானம் என்றால் என்ன என்பதை உலகிற்குக் காட்டியவன்.
ஒருசமயம் , கர்ணன் தானம் தரும் பொருட்களைத் தன் உள்ளங்கையில் வைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தான். யாசகம் பெற வந்தவர்கள் கர்ணனின் உள்ளங்கையில் இருந்த பொருட்களைத் தாமே எடுத்துக் கொண்டனர்.
அங்கு வந்த கிருஷ்ணன், “கர்ணா! தானம் தருபவர்கள் கை மேலேதான் இருக்கும். தானம் வாங்குபவர்கள் கை கீழே இருக்கும். இதுதானே வழக்கம். நீ ஏன் இவ்வாறு செய்கிறாய் ?” என்று கேட்டார்.
“ கிருஷ்ணா! நான் தானம் செய்வது புகழுக்காக அல்ல. எத்தனை பிறவி எடுத்தாலும் இதைப் போல தானம் செய்வதற்கு வல்லமை தா! என்று என் கைகளைக் கீழே வைத்து இறைவனை வேண்டி தானம் செய்கிறேன். நீயே சொல்! புண்ணியம் வேண்டுபவர்கள் கை கீழேதானே இருக்க வேண்டும்?” என்று கேட்க, கண்ணன் ஆமோதித்தான் .
கர்ணன் இறந்ததும் சொர்க்கத்துக்கு அனுப்பப்பட்டான். அங்கு சென்று சகல வசதிகளுடன் இருந்தும் அவனுக்கு ஏனோ பசி மட்டும் அடங்கவேயில்லை. எப்பொழுதும் பசி இருந்துகொண்டே இருந்தது. அவனும் சாப்பிட்டுச் சாப்பிட்டு அலுத்துப் போனான். பிறகு சொர்க்கத்தின் தலைவனிடம் சென்று கேட்டான்.
“நான் எவ்வளவு தான தருமங்கள் செய்திருக்கிறேன். எனக்கு ஏன் இக்கொடிய தண்டனை? எனக்கு ஏன் இப்படிப் பசிக்கிறது?” எனக் கேட்டான்.
சுவர்க்கத்தின் தலைவன், “கர்ணா! நீ பூவுலகில் வாழ்ந்த காலத்தில் பொன்னும், பொருளும், மணியும் ஏன் உன்னுயிரும் தானமாகக் கொடுத்து பெரும் புகழ் பெற்றவன். ஆனால் சிந்தித்துச் சொல். எப்போழுதாவது யாருக்காவது அன்னதானம் செய்திருக்கிறாயா?” எனக் கேட்டான்.
கர்ணனுக்கு அன்னதானம் செய்ததாக நினைவே இல்லை.
“அப்படியானால் இதற்கு என்னதான் வழி?” எனக் கேட்ட போது, “ உனது வலது கை ஆள் காட்டி விரலை வாயில் வைத்துக் கொள்... பசி அடங்கி விடும்!” என்றான்.
கர்ணனுக்கு ஒன்றும் புரியவில்லை. சந்தேகம் இருந்தாலும் வேறு வழி இல்லை என்பதால் கை ஆள் காட்டி விரலை வாயில் வைத்துச் சப்பினான். உடனே பசி அடங்கிற்று.
ஒன்றும் புரியாத கர்ணன், “இது என்ன மாய மந்திரம்?” எனக் கேட்க அதற்கு சொர்க்கத்தின் தலைவன் காரணம் உரைத்தான்.
“அன்பான கர்ணா! நீ பூவுலகில் வாழும் போது பசியுடன் வந்த ஒருவன் அன்னதானச் சத்திரம் எங்கு இருக்கிறதென்று வழி கேட்டான். நீயும் உனது வலதுகை ஆள்காட்டி விரலால் சத்திரத்தின் திசையைக் காட்டினாய். அந்த புண்ணியச் செயல் உனக்கு இப்பொழுது உதவுகிறது” எனக் கூறினான்.