Last Updated : 17 Apr, 2014 11:09 AM

 

Published : 17 Apr 2014 11:09 AM
Last Updated : 17 Apr 2014 11:09 AM

பகவான் ரமணர் மகாசமாதி தினம் 14/4/2014: மௌனமே ஆசீர்வாதம்

திருவண்ணாமலையிலேயே வாழ்ந்து வேறெங்கும் செல்லாமல் மக்களைத் தான் இருக்கும் இடத்திற்கு தன் தெய்வீக ஒளியால் வரவழைத்து தன் பக்தர்களாக்கிய பெருமை ரமண மகரிஷிக்கே உரியதாகும்.

நம்முடைய தலைமுறைக் காலத்திலேயே ஒரு சாதாரண மனிதராக அவதரித்து, பின்பு தன் முயற்சியாலும், பூர்வஜென்ம பலத்தாலும் தெய்வ நிலைய அடைந்தவர். அமைதியையும் ஆனந்தத்தையும் பரிபூரணமாக உணர்ந்தவர். தான் தெய்வ நிலைக்கு உயர்ந்துவிட்டதை வெளிப்படுத்தாமல் எளிய வாழ்க்கை வாழ்ந்து மக்களுக்கு அருளுபதேசமும் நயன தீட்சையும் வழங்கிய ஞான வள்ளல் ரமணர்.

அருப்புக்கோட்டை நகரின் அருகிலுள்ள திருச்சுழியில் 1879-ம் ஆண்டு பகவான் ரமணர் பிறந்தார். ரமணரின் சிறு வயதிலேயே தந்தை சுந்தரம் ஐயர் காலமானார், தாயார் அழகம்மை அரவணைப்பில் வளர்ந்த ரமணர் பள்ளி வயதுவரை சராசரி மாணவராகவே இருந்தார். விளையாட்டும் நீச்சலுமே அவரது பொழுதுபோக்கு. தனது 16-ம் வயதில் 1895-ல் அவரின் வீட்டிற்கு வந்த விருந்தினர் “அருணாசலத்திலிருந்து வருகிறேன்” என்று சொன்ன வார்த்தை அவரைப் பரவசப்படுத்தியது. திருவண்ணாமலைதான் அருணாசலம் என்பதை அவர்மூலம் உணர்ந்தார். அதுமுதல் அவரது உள்ளத்தில் ஒரு புதிய கிளர்ச்சி ஏற்பட்டது.

பின்பு ஒரு சமயம் மரண பயம் அவரை ஆட்கொண்டது. அந்த அனுபவத்தைத் தானே உணர ஒரு பிணம்போலப் படுத்தார், அவருள் ஏற்பட்ட உள்ளுணர்வு அவருக்கு இறப்பின் ரகசியத்தையும் இறப்பிற்குப் பின் என்ன என்பதையும் விளக்கியது.

“அழிவற்று அண்டமெங்கும் நிறைந்திருக்கும் ஆன்மஜோதியோடு ஒன்றியவன் நான்” என்ற அறிவு புலப்பட்டது.

1896, ஆகஸ்ட் 29-ல் அவரது அண்ணனின் ஒரு கோபச் சொல் இவரது ஞானத்தின் வாசலைத் திறந்தது. அண்ணனுக்குக் கடிதம் எழுதிவைத்துவிட்டு அண்ணாமலைக்குப் புறப்பட்டார்.

“நான் என் தகப்பனாரைத் தேடிக்கொண்டு அவரது உத்தரவுப்படி கிளம்புகிறேன். இது நல்ல காரியத்தில் பிரவேசித்திருக்கிறது. இதற்காக ஒருவரும் விசனப்பட வேண்டாம். ‘இதை'த்தேடி காசு, பணம் செலவு செய்ய வேண்டாம்...” என்று எழுதி கீழே தனது பெயரைக் குறிப்பிடாமல் கோடு போட்டுவைத்தார். ‘தகப்பனார்' என ஈசனையும், ‘இது' என அஃறிணையில் தன்னையும் குறிப்பிட்டார்; ஆணவம் அழிந்த ஆத்மாவாக வெளிப்பட்டு, தான் ஞானம் அடைந்துவிட்டதை உணர்த்தினார்.

1896 செப்டம்பர் முதல் நாள் ரமணரின் அருள்பாதம் அண்ணாமலை என்னும், அருணாசலத்தில் அடி வைத்தது. நேராகக் கோவிலுக்குள் நடந்தார். “அப்பா, நான் வந்துவிட்டேன்” என்றுகூறி அண்ணாமலையார் முன் ஆனந்தக் கண்ணீர் விட்டார். அவரது பிரயாணம் அன்றோடு நிறைவுபெற்றது. அதற்குப்பிறகு தன் ஸ்தூல சரீரத்துடன் வேறு எங்குமே சென்றதில்லை.

ரமணரின் புகழ் நாடெங்கும் பரவத் தொடங்கியது. ரமண பகவானின் ‘நான் யார்' என்ற தன்னையறியும் தத்துவ விளக்கம் அனைவரையும் கவர்ந்தது. ‘‘நான் என்பது எங்கிருந்து புறப்படுகிறதோ அதைக் கவனித்தால் மனம் அங்கே ஒடுங்கும், அதுவே தபஸ்!” என்பது போன்று விளக்கங்கள் அருளினார்.

ரமண மகரிஷி காலத்தில் அவரைக் கண்டோர் அடைந்த ஆனந்தத்திற்கும், துன்பங்கள் நீங்கி அமைதியடைந்த மக்களின் சுகத்திற்கும் அளவில்லை. ரமணர் தனது ஆற்றலை வெளிப்படையாக யாருக்கும் காட்டுவதில்லை. பயன் அடைந்தோர் அவரிடம் நன்றி கூறினாலும் அதை அவர் ஏற்பதில்லை. மௌனமே அவரது ஆசீர்வாதம். மௌனமே அவரது பேச்சு. அதில் நாம் மூழ்க மனமோ சுகமாகும்.

பகவான் ரமணர் தனது தாயாரின் மறைவின்போது அவரின் தலையிலும் மார்பிலும் தனது இரு கைகளையும் வைத்து முக்தி அடையச்செய்தார். அது மட்டுமல்ல, தாயாரின் சமாதியில் லிங்கம் பிரதிஷ்டை செய்து கோவிலும் கட்டினார், அதை தியான பூமியாக்கினார். ஒவ்வொரு நாளும் பலரும் அங்கமர்ந்து அன்பின் அருளொளியைப் பெறுகின்றனர். ரமணரை இந்துக்கள் மட்டுமின்றி கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், பார்சியர்கள் என பல்வேறு மதத்தவரும் சென்று வழிபட்டுள்ளனர். ஞானி என்பவன் எவரும் எளிதில் அணுக முடியாதவன் என்ற நிலையை மாற்றி அனைவரும் தன்னை அணுகும்படி வாழ்ந்தார். ஆத்ம விசாரணை செய்யும்முறையை தெளிவுபடுத்தினார்.

கிரிவலத்தினால அடையும் நன்மை என்ன எனக் கேட்ட பக்தருக்கு, “கிரிவலம் தீயைப் போன்றது. தன்னைத் தொட்டவரைத் தீ சுடுவதுபோல அது உன்னை ஈர்க்கும். நம்பிக்கை உண்டோ இல்லையோ, ஒருமுறை கிரிப்பிரதட்சணம் செய்துபார்; நீயே உணர்வாய்” என்றார். ரமணரின் இந்த கூற்றுக்குப் பிறகே கிரிவலம் பிரபலமானது. பவுர்ணமியில் இன்று லட்சக்கணக்கானோர் வலம் வருகின்றனர். ‘உன்னை விசாரித்து அறி' என்பது அவரது சுருதி வாக்கியம்.

அவருடைய உபதேசங்களின் சாரங்களில் சில:

* இறைவனைச் சரணடை, சரணாகதியே மகத்தான பிரார்த்தனை.

* எவர் முன்னிலையில் பரிபூரண அமைதி கிடைக்கிறதோ அவரே உன் குருவாவார்; குரு உள்ளும் இருக்கிறார், வெளியேயும் இருக்கிறார்.

* எல்லாவற்றையும் துறந்து அகங்காரத்துடன் இருப்பதைவிட, அகங்காரத்தைத் துறந்த அரசனாயிரு.

இருபதாம் நூற்றாண்டு மக்களுக்குத் தேவையான ஆன்மிகத்தை எளிமையாக உணரவைத்த ஞானி தனது ஸ்தூல உடலைவிட்டு ஜோதியாகி 1950-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் நாள் இரவில் அருணைமலையில் கலந்தார். அந்த ஜோதியை பல்லாயிரக்கணக்கானோர் அதே இரவு வானில் கண்டதாகக் கூறினர்.

ரமணர் பெரிய பிரசங்கம் நிகழ்த்தியதில்லை. தனக்கென சீடர் பட்டாளம் உருவாக்கவில்லை. அவர் போதனை எல்லாம் அன்பான அருளுரையே!

சகஜ சமாதி

ஒருவன் மாட்டு வண்டியில் பிரயாணம் செய்கிறான். அப்போது அவனுக்குத் தூக்கம் வந்துவிடுகிறது. மாடுகள் நடந்துகொண்டே இருக்கின்றன. பல இடங்களைக் கடந்து செல்கின்றன. வழியிலே சோலைகளும் ஊர்களும் இருக்கின்றன. அவற்றின் வழியே வண்டி செல்கிறது. வண்டி செல்வதனால் அதற்கும் தூங்கும் மனிதனும் அந்த வழியிலே சென்றவன் ஆகிறான். வண்டி ஓரிடத்தில் நிற்கிறது. சிறிது நேரம் கழித்து வண்டியில் இருப்பவன் விழித்துக்கொள்கிறான். அதற்கு முன் அவன் கடந்த வழி அவனுக்குத் தெரியாது. அங்கிருந்த காட்சிகளையும் அவன் அறியான். ஆனாலும் அவன் அத்தனைக் காட்சிகளையும் கடந்தே வந்திருக்கிறான். சகஜ சமாதியில் இருக்கும் ஆத்ம ஞானி உலகில் வாழ்ந்தாலும் அதில் ஈடுபடாமல் அதனால் வேறுபாடு அடையாமல் இருக்கிறான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x