

திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு, இவ்விழா வரும் 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 25-ம் தேதி பஞ்சமி தீர்த்தத்துடன் நிறைவடைய உள்ளது.
இதையொட்டி திருச்சானூர் தாயார் கோயிலில் வாகன பராமரிப்பு பணிகள், வர்ணம் தீட்டும் பணிகள், மாட வீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் என அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ளன.
மேலும், பிரம்மோற்சவத்துக்கு திருப்பதியில் இருந்து திருச்சானூருக்கு தொடர்ச்சியாக அரசுப் பேருந்துகளை இயக்கவும் ஆந்திர அரசுப் போக்குவரத்து கழக அதிகாரிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு விட்டது. அதுமட்டுமல்லாமல் பக்தர்களுக்கு தகுந்த பாதுகாப்பு, இலவச உணவு, தரிசன வசதி, லட்டு பிரசாத விநியோகம் போன்ற ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று காலை பிரம்மோற்சவ விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை திருப்பதி எஸ்.பி. சுப்புராயுடு தலைமையில் உயர் அதிகாரிகள் மேற்பார்வையிட்டனர்.