

சென்னை: சென்னை வடபழனியை அடுத்த சாலிகிராமத்தில் உள்ள பரணி காலனி, சூர்யா தெருவில் ஸ்ரீ பால விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இங்கு சுயம்பு மூர்த்தியாகத் தோன்றிய அரசமர பிள்ளையாருக்கு, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ராகுகால சமயத்தில் (மாலை 4.30 முதல் 6 மணி வரை) திரிசதி அர்ச்சனை நடைபெறுகிறது.
இதுகுறித்து இக்கோயில் அரங்காவலரும், ஸ்ரீ பால விநாயகர் சேவா டிரஸ்ட் தலைவருமான குருஜி ஸ்ரீ சுப்பிரமணியம் கூறியதாவது: 1983-ம் ஆண்டு, நானும் எனது நண்பரும் சேர்ந்து ரூ.20,000 பணத்தை வைத்து, ஒரு குடிசை அளவிலேயே விநாயகருக்கு கோயில் எழுப்பினோம். 1987-ம் ஆண்டு முதல் ஏகதின லட்சார்ச்சனை தொடங்கப்பட்டது.
2000-ம் ஆண்டு ராஜ கோபுரம் கட்டி மூலவர், முருகர், ஆஞ்சநேயர் சந்நிதிகளை அமைத்தோம். ஏகதின லட்சார்ச்சனையின் 14-ம் ஆண்டு சமயத்தில் அரசமரத்தில் சுயம்புவாக விநாயகர் தோன்றினார்.
அன்று முதல் அரசமர விநாயகருக்கு ஞாயிற்றுக்கிழமை ராகுகால வேளையில் திரிசதி அர்ச்சனை செய்து வருகிறோம்ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளும், ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் இக்கோயிலை ‘திவ்ய ஷேத்ரம்’ என்று கூறுவர் என்றார்.