Published : 05 May 2025 04:49 AM
Last Updated : 05 May 2025 04:49 AM
காரைக்கால்: காரைக்கால் அம்மையார், சோமநாதர், அய்யனார் கோயில்களின் கும்பாபிஷேகம் நேற்று சிறப்பான வகையில் நடைபெற்றது. காரைக்கால் கைலாசநாதர்- நித்ய கல்யாண பெருமாள் வகையறா தேவஸ்தானத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற காரைக்கால் அம்மையார் கோயில், சோமநாயகி சமேத சோமநாத சுவாமி கோயில், பூர்ண புஷ்கலா அய்யனார் கோயில் ஆகிய கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, 17 ஆண்டுகளை கடந்த நிலையில் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, ரூ.90 லட்சம் மதிப்பில் கடந்த ஓராண்டாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவடைந்தன.
இதையடுத்து, கும்பாபிஷேகத்துக்கான பூர்வாங்க பூஜைகள் ஏப்.30-ம் தேதி காலை தொடங்கின. மே 1-ம் தேதி மாலை முதல் கால யாக பூஜைகள் தொடங்கப்பட்டு, நேற்று காலையுடன் 6 கால யாக பூஜைகள் நிறைவு பெற்று, மங்கல வாத்தியங்கள், வேத மந்திரங்கள் முழங்க கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு கோயிலை வலம் வந்து காலை 6.30 மணியளவில் பூர்ண புஷ்கலா சமேத அய்யனார் கோயில் விமானம், அம்மையார் திருக்குளத்து நந்தி விமானத்துக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து 8 மணியளவில் சோமநாத சுவாமி, அம்மையார் கோயில்களின் ராஜகோபுரம் மற்றும் விமானங்களுக்கு சிவாச்சாரியார்களால் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சுவாமிகளுக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
விழாவில், புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் ஆர்.செல்வம், குடிமைப் பொருள் வழங்கள் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமுருகன், எம்எல்ஏக்கள் ஏ.எம்.எச்.நாஜிம், பி.ஆர்.சிவா, எம்.நாகதியாகராஜன், மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லட்சுமி சவுஜன்யா, கோயில் நிர்வாக அதிகாரி ஆர்.காளிதாசன், நிர்வாக அதிகாரி(கோயில்கள்) கு.அருணகிரிநாதன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தை கண்டு தரிசனம் செய்தனர். 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT