Published : 26 Apr 2025 12:28 AM
Last Updated : 26 Apr 2025 12:28 AM
சென்னை / காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 71-வது பீடாதிபதியாக ரிக் வேதவிற்பன்னர் ஸ்ரீ கணேச சர்மா திராவிட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அட்சய திருதியை தினத்தில்(ஏப்.30-ம் தேதி), அவர் சந்நியாஸ்ரம தீட்சை பெற உள்ளார் என்று காஞ்சி சங்கர மடத்தின் ஸ்ரீ கார்யம் சல்லா விஸ்வநாத சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக காஞ்சி சங்கர மடம் சார்பில் அவர் வெளியிட்ட அறிக்கை: ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 70-வது பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், புனித அட்சய திருதியை தினத்தில் (ஏப்.30-ம் தேதி, புதன்கிழமை) ஸ்ரீ துட்டு சத்ய வெங்கட சூர்ய சுப்ரமண்ய கணேச சர்மா திராவிட்டுக்கு, காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் உள்ள பஞ்ச கங்கா தீர்த்தத்தில் காலை 6 மணி முதல் 9 மணிக்குள் சந்நியாஸ்ரம தீட்சை அருள உள்ளார்.
ஸ்ரீ ஆதிசங்கரர் ஜெயந்தி: இந்த புனித நிகழ்ச்சி கிமு 482-ல் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தை நிறுவிய ஸ்ரீ ஆதிசங்கரரின் 2,534-வது ஜெயந்தி மஹோத்ஸவத்தை (மே.2-ம் தேதி) ஒட்டி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
ஆந்திர பிரதேச மாநிலம் துனி என்ற ஊரில், பிரம்மஸ்ரீ துட்டு ஸ்ரீ நிவாச சூர்ய சுப்பிரமணிய தன்வந்தரி - அலிவேலு மங்காதேவி தம்பதிக்கு 2001-ம் ஆண்டு, ஸ்ரீ கணேச சர்மா திராவிட் மகனாகப் பிறந்தார். பிரம்மஸ்ரீ துட்டு ஸ்ரீ நிவாச சூர்ய சுப்பிரமணிய தன்வந்தரி, அன்னாவரம் ஸ்ரீ வீர வெங்கட சத்யநாராயண சுவாமி கோயிலில் விராட புரோகிதராக பணிபுரிந்து வருகிறார்.
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் நிர்மல் மாவட்டம், பசாராவில் உள்ள ஸ்ரீ ஞான சரஸ்வதி தேவஸ்தானத்தில், கர்நாடகாவைச் சேர்ந்த பிரம்மஸ்ரீ சந்துகுட்லு ஹோசமனே ரத்னாகர பட் சர்மாவிடம் (ரிக்வேத சலக் ஷண கனபாடிகள்) ரிக்வேதம் பயின்ற ஸ்ரீ கணேச சர்மா திராவிட், அங்கேயே வேதம் பயிற்றுவித்து வந்துள்ளார். 2006-ம் ஆண்டு வேத கல்வியைத் தொடங்கிய காலத்தில் இருந்தே, ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் பூஜ்ய ஸ்ரீ சங்கராச்சாரியார் சுவாமிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார். ரிக் வேதம் தவிர யஜூர்வேதம், சாமவேதம், சதாங்கம், தஷோபநிஷத் படிப்புகளை முடித்த, ஸ்ரீ கணேச சர்மா திராவிட், தற்போது சாஸ்திரக் கல்வியை தொடர்கிறார். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூர்வீகம் வலங்கைமான்: தமிழகத்தில், ஆழ்ந்த வைதீக குடும்பத்தில் பிறந்து,ஆந்திரமாநிலத்துக்கு குடி பெயர்ந்தவர்கள், தங்கள் பெயருக்குப் பின்னால் திராவிட் என்ற பெயரை சேர்த்துக் கொள்வதுண்டு. ஸ்ரீ கணேச சர்மா திராவிட்டின் குடும்பம், கும்பகோணம் அருகே உள்ள வலங்கைமானை பூர்வீகமாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT