தொடர் விடுமுறையை முன்னிட்டு பழநி கோயிலில் குவிந்த பக்தர்கள்

பழநியில் வின்ச் ரயில் மூலம் மலைக் கோயிலுக்குச் செல்ல வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.
பழநியில் வின்ச் ரயில் மூலம் மலைக் கோயிலுக்குச் செல்ல வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.
Updated on
1 min read

தொடர் விடுமுறை காரணமாக, பழநி மலைக் கோயிலில் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். 3 மணி நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

புனித வெள்ளி மற்றும் சனி, ஞாயிறு விடுமுறை என தொடர் விடுமுறையை முன்னிட்டு, பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலில் நேற்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பொது மற்றும் கட்டண தரிசன வரிசையில் 3 மணி நேரம் வரை வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் பிஸ்கட்டும், பிரசாதமும் வழங்கப்பட்டது. அன்னதானம் வழங்கும் இடத்திலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ரோப் கார் மற்றும் வின்ச் ரயிலில் செல்ல பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் 2 மணி நேரம் வரை காத்திருந்து மலைக் கோயிலுக்குச் சென்றனர்.

பழநி அடிவாரம், சந்நிதி வீதி, பூங்கா ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் வந்த வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பழநியில் இருந்து சென்ற மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட வெளியூர் பேருந்துகளில் கூட்டம் அலைமோதியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in