

சென்னை: சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று (ஜன.14) மாலை நடைபெறும் மகரவிளக்கு பூஜையில் 1.5 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக, தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று (ஜன.14) நடைபெறும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு மாலை 6.25-க்கு ஐயப்பனுக்கு திருவாபரணம் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து, பொன்னம்மபல மேட்டில் மகரஜோதி தரிசனம் நடைபெறும்.
ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் பந்தளம் சாஸ்தா கோயிலில் இருந்து புறப்பட்டு, இன்று சந்நிதானத்தை வந்தடையும். இந்த ஊர்வலத்துக்கு சரங்குத்தியில் தேவசம்போர்டு சார்பில் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்படும்.
சந்நிதானம் வரும் திருவாபரணத்தை தந்திரிகள் கண்டரரு ராஜீவரு, பிரம்மதத்தன் ராஜீவரு, மேல்சாந்தி அருண்குமார் நம்பூதரி ஆகியோர் பெற்றுக் கொள்வர். மாலை 6.30 மணிக்கு ஐயப்பனுக்கு திருவாபரணம் அணிவிக்கப்பட்டவுடன், பொன்னம்பலமேட்டில் ஜோதி தரிசனம் நடைபெறும். இதையொட்டி, பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை தேவசம்போர்டு அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
இதற்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமையன்று நடைபெற்றது. இதுதொடர்பாக, தேவசம் போர்டு தலைவர் பி.எஸ். பிரசாந்த் கூறியதாவது: “இன்று மாலை நடைபெறவுள்ள மகரவிளக்கு பூஜையில் 1.5 லட்சம் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்லைன் மூலம் 40 ஆயிரம் பக்தர்கள், ஸ்பாட் புக்கிங் மூலம் ஆயிரம் பக்தர்களை மட்டும் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருவாபரண ஊர்வலத்துக்கு தேவசம் போர்டு அமைச்சர் வி.என்.வாசவன் மற்றும் தமிழக இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு ஆகியோர் தலைமை தாங்குவர். திருவாபரண ஊர்வல வரவேற்புக்குப் பின்னர், மகரவிளக்கு பூஜை நடைபெறும்,” என்று அவர் கூறினார்.
மகரஜோதி நாளில் புல்மேட்டில் நெரிசல் ஏற்படும் என்பதால், இடுக்கி மாவட்டத்துடன் இணைந்து கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மகரவிளக்கு பூஜையில் அணிவிக்கப்படும் திருவாபரணத்துடன் ஐயப்பனை இன்று முதல் வரும் 18-ம் தேதி வரை தரிசிக்கலாம். வரும் 19-ம் தேதி வரை சுவாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். வரும் 20-ம் தேதி காலை 6.30 மணிக்கு பந்தள ராஜ குடும்பத்தினர் சுவாமி தரிசனம் செய்த பின்னர், கோயில் நடை அடைக்கப்பட்டு, மகர விளக்கு பூஜை நிறைவடையும்.