

ராமநாதபுரம்: திருஉத்தரகோசமங்கை மரகத நடராஜர் ஆருத்ரா தரிசன விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், திருஉத்தரகோசமங்கையில் ஆதி சிதம்பரம் எனப்படும் மிகப் பழமையான மங்களேஸ்வரி உடனுறை மங்களநாதர் கோயில் உள்ளது. இங்கு தனி சன்னதியில் நடராஜர் எழுந்தருளியுள்ளார். ஆறு அடி உயரமுள்ள ஒற்றை பச்சை மரகத கல்லாலான நடராஜர் சிலை ஆண்டு முழுவதும் சந்தனம் பூசி பாதுகாக்கப்படுகிறது. இங்கு மார்கழி மாதத்தில் நடைபெறும் ஆருத்ரா தரிசன விழாவிற்கு முந்தைய நாள் ஆண்டுக்கு ஒரு நாள் மட்டும் சந்தனம் களையப்பட்டு, சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. இந்த ஆலயத்தில் சந்தனக்காப்பு களைந்த பின் நடராஜரை ஒரு நாள் மட்டுமே திருமேனியாய் தரிசிக்க முடியும். அதனால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்வர்.
இந்தாண்டு ஆருத்ரா தரிசன விழா கடந்த 4-ம் தேதி காப்பு கட்டுடன் தொடங்கியது. அதனையடுத்து நேற்று (ஜன.12) காலை நடை திறக்கப்பட்டு நடராஜர் திருமேனியில் இருந்த சந்தனக்காப்பு களையும் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து 32 வகையான மகா அபிஷேகம் தொடங்கி, தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் ராணி ராஜேஸ்வரி நாச்சியார் மற்றும் அவரது குடும்பத்தினர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் மூலிகை திரவியங்கள் பூசப்பட்ட நிலையில் நடராஜர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதன்பின் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து நடராஜரை தரிசித்தனர்.
ஆருத்ரா தரிசனம்: நேற்று காலை 10 மணிக்கு மேல் கூத்தர் பெருமான் கல்தேர் மண்டபம் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனையடுத்து நள்ளிரவு நடராஜ பெருமானுக்கு ஆருத்ரா மகா அபிஷேகம் தொடங்கி நடைபெற்றது. பின்னர் இன்று (ஜன.13) அதிகாலை 3 மணிக்கு மேல் நடராஜர் திருமேனி முழுவதும் புதிய சந்தனம் பூசப்பட்டு ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. அருணோதய காலத்தில் சோடச உபசார அலங்கார தீபாரதனையும் நடந்தது.
ஆருத்ரா தரிசனத்தையடுத்து அதிகாலை முதல் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தது நடராஜரை தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் திவான் பழனிவேல் பாண்டியன் செய்திருந்தார். ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் மற்றும் கீழக்கரை டிஎஸ்பி சுதிர்லால் தலைமையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.