

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயில் கனக சபையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தேர்த் திருவிழா நாளையும் (ஜன.12) , தரிசன விழா நாளை மறுநாளும் ( ஜன13) நடைபெறுகிறது. இதனையொட்டி நடராஜர் கோயில் கடந்த 4-ம் தேதி தேதி கோயில் கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு பல்வேறு பூஜைகள், அபிஷேகங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பஞ்ச மூர்த்தி வீதி உலாவும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், திருவிழாவை காரணம் காட்டி கோயில் தீட்சிதர்கள் கனகசபையில் வழிபட பக்தர்களை அனுமதிக்க சிரமம் ஏற்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாதுகாப்பு கேட்டு கோயில் தீட்சிதர்கள் தரப்பில் மனு அளிக்கப்பட்டது. இதற்கு தெய்வீக பக்தர்கள் பேரவையின் நிறுவனத் தலைவர் ஜெமினி ராதா என்பவர் கனகசபையில் ஆண்டாண்டு காலமாக பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் எந்த தடையும் இன்றி வழிபட்டு வந்தனர்.
இவர்கள் திருவிழாவை காரணம் காட்டி அனுமதி மறுப்பது ஏற்கத்தக்கதல்ல. எனவே தமிழக அரசு அரசாணையில் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். தீட்சிதர்கள் அனுமதி மறுத்தால் அனுமதியை மீறி கனகசபையில் ஏறுவோம் என அவரும் காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.
இந்த நிலையில், இன்று (ஜன.11) காலை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் டிஎஸ்பி லாமேக் மற்றும் போலீஸார் பாதுகாப்புடன் தெய்வீக பக்தர்கள் பேரவை நிறுவனத் தலைவர் ஜெமினி ராதா உள்ளிட்ட நிர்வாகிகள் பொதுமக்கள், பக்தர்கள் கனக சபையின் மீது ஏறி சாமி தரிசனம் செய்தனர். இதனால் கோயிலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.