சபரிமலை பக்தர்களுக்காக சத்திரம் வனப்பகுதியில் சிறப்பு குடில்கள் அமைப்பு!

படங்கள்: என்.கணேஷ்ராஜ்.
படங்கள்: என்.கணேஷ்ராஜ்.
Updated on
2 min read

தேனி: சத்திரம் வனப்பகுதியில் தங்கும் பக்தர்களுக்கு பனிதாக்காத, விஷ ஜந்துக்கள் ஊடுருவதைத் தடுக்கும் வகையில் சிறப்பு குடில்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும் தற்காலிக கழிப்பிடம், குளியலறை வசதிகளுக்கான கட்டுமானப் பணிகளும் நடைபெறுகின்றன.

தமிழக - கேரள எல்லையான குமுளியில் இருந்து வண்டிப்பெரியாறு, எருமேலி வழியாக பம்பைக்கு வாகனங்களில் செல்லலாம். மேலும் பாதயாத்திரையாக செல்பவர்கள் வண்டிப்பெரியாறில் இருந்து 14 கி.மீ.தூரம் உள்ள சத்திரத்தை அடைந்து அங்கிருந்து புல்மேடு வனப்பாதை வழியே 12 கி.மீ நடந்து சென்றும் சன்னிதானத்தை அடையலாம். இது வனப்பாதை என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி காலை 7 முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகிறது. தற்போது தினமும் சராசரியாக 500 பக்தர்கள் வனப்பாதை வழியே சென்று கொண்டிருக்கின்றனர்.

சில வாரங்களில் பக்தர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து விடும். ஆகவே இதற்கான முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மதியம் 2 மணிக்குப்பிறகு இந்த வனப்பாதையில் செல்ல அனுமதி இல்லாததால் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இப்பகுதியிலே தங்கி விடுவர். இவர்களுக்காக இலவச தங்கும் வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

வனப்பகுதி என்பதால் இங்கு பனியின் தாக்கமும், அவ்வப்போது சாரல் மழையும் பெய்யும். ஆகவே இவற்றை எதிர்கொள்ளும் வகையில் பனி தாக்காத குடில்கள் 3 இடங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன. தரையில் ஈரத்தின் தாக்கம் மற்றும் விஷ ஜந்துகளின் ஊடுருவல் இருக்கும் என்பதால் நிலத்தில் இருந்து 3 அடி உயரத்தில் மரப்படுக்கை அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு சுமார் 200 பேர் வரை தங்க முடியும். அதே போல் தற்காலிக கழிப்பிடங்கள், குளியலறை போன்றவையும் அமைக்கப்பட்டு வருகிறது. சில தினங்களில் இப்பணிகள் முடிந்து பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் போது தயாராக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேவசம்போர்டு சிறப்பு அதிகாரி ராஜேஷ்
தேவசம்போர்டு சிறப்பு அதிகாரி ராஜேஷ்

இதுகுறித்து வண்டிப்பெரியாறு தேவசம்போர்டு சிறப்பு அதிகாரி ராஜேஷ் கூறுகையில், “பக்தர்கள் இங்கு சிரமமின்றி தங்கவும், அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்யவும் ஏற்பாடுகள் மும்முரமாக செய்யப்பட்டு வருகின்றன. இவை அனைத்தையும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். இருமுடிகள், சுமைகள் உள்ளிட்டவற்றை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும் தனியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in